கோவை: கோவை உக்கடம் அருகே குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஓவியப்போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அந்த கருத்துகள் தங்கள் கையில் இருந்த ஆட்சி, அதிகாரங்கள் பறிபோய் விட்டன என்ற நிலையில் பேசப்பட்ட கருத்துக்கள். ஆனால், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையை ஒருமையில் பேசுவது, என்பது மற்றவர்கள் கேட்கின்றபோது, முகம் சுளிக்கும் அளவிற்கு இருந்தது. கடந்த காலங்களில் அவர்கள் செய்த தவறுகளை மறைத்து பேசியுள்ளனர். இனிமேல் அதிமுகவினர் அரசு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் ஒருமையில் பேசினால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. முன்னாள் அமைச்சர் தங்கமணி ரெய்டு விவகாரத்தில் தங்கமணி, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என மூன்று பேரும் மூன்று விதமான கருத்துக்களை பேசி வருகின்றனர். இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அரசியல்வாதி தான் கொள்ளையடித்த பணத்தில் கிரிப்டோ கரன்சி முதலீடு செய்த முதல் வழக்கை தங்கமணி சந்தித்து உள்ளார்.ஏறத்தாழ 3 லட்சம் டன் அளவிற்கு நிலக்கரி காணாமல் போயுள்ளது. கண்ணுக்கு தெரிந்து நிலக்கரி காணாமல் போயுள்ளது. நான் தங்கமணிக்கு கேட்கக்கூடிய கேள்விக்கு அவரிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை. ஒரு வெளிப்படையான தன்மையோடு கூறவேண்டும். 2006, 2011, 2016 மற்றும் 2021 என்று 4 தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில், உள்ள சொத்து மதிப்புகளை பட்டியலிட்டு கூற வேண்டும். அப்பொழுது தெரியும் சொத்து மதிப்பு உயர்ந்து இருக்கின்றதா? இல்லையா என்று. நிச்சயம் தவறு செய்தவர்கள் மீது, கொள்ளை அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்….
The post அதிகாரிகளையும், காவல்துறையினரையும் அதிமுகவினர் ஒருமையில் பேசினால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை appeared first on Dinakaran.