×

இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: கருப்பு கொடியுடன் ஆயிரக்கணக்கில் திரண்டனர்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் நேற்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், திமுக, காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 74 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். 8 விசைப்படகுகள், 4 நாட்டுப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 மீனவர்கள், ஓராண்டு, 2 ஆண்டு மற்றும் 6 மாதம் சிறை தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் 170க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை பறிமுதல் செய்து வைத்துள்ளது. இதனிடையே, சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்குவது போல, ஒன்றிய அரசும் இழப்பீடு வழங்க வேண்டும். கச்சத்தீவு பகுதியில் இருநாட்டு மீனவர்களும் பிரச்னை இல்லாமல், மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக மீனவர்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டிக்காமலும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்காமலும் இருக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, ராமேஸ்வரம் பஸ்நிலையம் முன்பு நேற்று காலை அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர், எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், காங்கிரஸ் எம்பிக்கள் விஜய் வசந்த், ராபர்ட் ப்ரூஸ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் அனைத்து மீனவர்கள் கூட்டமைப்பினர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால், கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 

The post இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: கருப்பு கொடியுடன் ஆயிரக்கணக்கில் திரண்டனர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union BJP government ,Rameswaram ,Union government ,Sri Lankan Navy ,DMK ,Congress ,Nadu ,Sri Lanka ,
× RELATED சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்திற்கு...