×

திருமலைசமுத்திரம் பகுதிகளில் மரவள்ளி கிழங்குக்கு களையெடுக்கும் பணி மும்முரம்

*செம்மண்ணில் விதைக்கலாம்

*அதிக லாபம் ஈட்டலாம்

தஞ்சாவூர் : மரவள்ளி கிழங்கு சாகுபடியில் களை எடுக்கும் பணி திருமலைசமுத்திரம் பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் களை எடுக்கும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் மரவள்ளிக்கிழங்கு குச்சிகள் நடவு செய்யப்பட்டு, பம்புசெட் நீர்பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தற்போது நடவு செய்யப்பட்ட குச்சிகள் முளைத்துவருகிறது. குச்சி நடுவில் அதிகமான களைகள் வளர்வதால், செடிகள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. விவசாய தொழிலாளர்கள் மூலம் களைகளை அகற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து விவசாயி கூறுகையில், மரவள்ளிக்கிழங்கில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பொறுத்தவரை மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும் நல்ல லாபத்தை அள்ளி தரக்கூடிய ஒரு சிறந்த பயிராகும். இந்த மரவள்ளிக்கிழங்கு சாகுபடியை பொறுத்தவரை சரியான நல்ல இரகங்கள் மற்றும் நிலம் தயாரிப்பு முறைகள் மிகவும் முக்கியம். பாசனவசதி இருந்தால் வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் நடவு செய்யலாம். இருப்பினும் மானாவாரியில் செப்டம்பர் அக்டோபர் மாதம் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலங்கள்.

செம்மண், கரிசல் மண் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய ஏற்றது. மண்ணில் தழைச்சத்து அதிகம் இருக்க வேண்டும். நல்ல காற்றோட்ட வசதியும், தண்ணீர் தேங்காமலும் இருக்கவேண்டும்.
மேலும் மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7 க்குள் இருக்க வேண்டும். நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழுது பயன்படுத்த வேண்டும். கடைசி உழவின் போது 25 டன் தொழுஉரம் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிட வேண்டும். பிறகு 75 செ.மீ இடைவெளியில் பார் அமைக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 1900-2500 கிலோ, கிழங்குகள் நடுவதற்கு தேவைப்படும்.

ஒவ்வொரு கரணையும் அரை அடி நீளத்துடன் 8-10 கணுக்களுடன் இருப்பது நல்லது. விதைக்கரணைகளை பூசண மருந்துக் கரைசலில் ஊற வைத்து நடவு செய்வதால் நோய் தாக்குதலைத் தடுக்கலாம். மானாவாரி மற்றும் பாசனப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியைத் தாங்கும் விதமாக ஊட்டச்சத்துக் கரைசலில் கரணை நேர்த்தி செய்ய வேண்டும். பாசன சாகுபடிக்கு இரண்டரை அடி இடைவெளியில் பார்பிடித்து அதே அளவு இடைவெளியில் பாரில் வரிசையாக நடவு செய்ய வேண்டும். வளமான நிலங்களுக்கு 3X3 இடைவெளி போதுமானது. மானாவாரியில் 2X2 இடைவெளிப் பார்கள் அமைத்து நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்தவுடன் முதல் பாசனமும், அதன் பிறகு மூன்றாவது நாள் உயிர்தண்ணீரும் விடவேண்டும். பிறகு 3 மாதங்கள் வரை 7 முதல் 10 நாள் இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும். அதற்கு மேல் 8 வது மாதம் வரை 20 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது. சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது மிகச் சிறந்த யுக்தியாகும். இதனால் நீர் சேமிக்கப்படும். மரவள்ளி கிழங்கு உரம் இடும் முறை பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் 40 கிலோ மணலுடன் கலந்து நடவு செய்த 30வது நாளில் இடவேண்டும்.

இவற்றில் அடியுரமாக ஏக்கருக்கு 40 கிலோ யூரியா, 225 கிலோ சூப்பர் பாஸ்பேட், 80 கிலோ பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். மேலும் அடியுரமாக ஏக்கருக்கு 100 கிலோ ஜிப்சம் இட வேண்டும். நடவு செய்த 20 வது நாள் முதல் களை எடுக்க வேண்டும். அப்போது முளைக்காத கரணைகளுக்கு பதில் புதிய கரணைகளை நடவு செய்ய வேண்டும். பிறகு 3-ம் மாதம் களை எடுத்து மண் அணைக்க வேண்டும்.

செடி நட்டு 60வது நாளில் செடிக்கு இரண்டு கிளைகளை மட்டும் விட்டுவிட்டு மீதியை அகற்றவேண்டும்.மரவள்ளிக்கிழங்கு சாகுபடி முறையில் இலைகள் மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும். நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும். இவையே அறுவடைக்கான அறிகுறியாகும். மரவள்ளிக்கிழங்கு சாகுபடி முறையில் 240 நாட்களில் ஏக்கருக்கு 15-20 டன் கிழங்குகள் வரை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளை ஈ

வெள்ளை ஈ மரவள்ளியைத் தாக்கும் முக்கியமான பூச்சியாகும். மேலும் மாவுப்பூச்சி, சிவப்பு சிலந்தி பேன் ஆகியவையும் மரவள்ளியை தாக்கும். இதற்கு 5% வேப்பங்கொட்டைச் சாறு (100 லிட்டர் தண்ணீருக்கு 5 கிலோ வேப்பங்கொட்டை பொடி) தெளிக்கலாம்.

The post திருமலைசமுத்திரம் பகுதிகளில் மரவள்ளி கிழங்குக்கு களையெடுக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Thirumalai Samudram ,Thanjavur ,Thirumalaisamutram ,Thanjavur district ,
× RELATED தஞ்சாவூரில் கூட்டுப் பாலியல்...