×

தாக்கப்படுவதும், கைதாவதும் தொடர்கதையாக உள்ளது தமிழ்நாட்டு மீனவர்களும் இந்திய குடிமக்கள் தான்: ஒன்றிய அரசு சமமாக கருதி மீட்க வேண்டும், ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து


மதுரை: தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைதாவதும் தொடர்கதையாக உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களும் இந்திய குடிமக்களே, எனவே ஒன்றிய அரசு சமமாகக் கருதி மீட்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழ்நாடு மீனவர்கள் மீன் பிடிப்பதையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். கடலில் பிடித்த மீன்களை கரைக்கு கொண்டு வந்து விற்று தங்களது குடும்பத்தினை நடத்தி வருகின்றனர்.

தங்களது வாழ்வாதாரத்திற்காக விசைபடகுகளில் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்கின்றனர். ஆனால், இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்தும், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தும் வருகின்றனர். குறிப்பாக பல நேரங்களில் தமிழ்நாட்டு மீனவர்களை கொடூரமாக தாக்கி, படகுகளையும், வலைகளையும் சேதப்படுத்துவது மட்டுமின்றி, மீனவர்களை கைது செய்கின்றனர். கைது செய்யப்படும் மீனவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பல மாதங்கள் சிறையில் அடைக்கின்றனர்.

இதுவரையில் 54 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, இலங்கை சிறையிலுள்ள 54 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை அரசிடம் இருந்து விடுவித்து மீட்டு உடனடியாக இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன், ‘‘இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.

இது இந்தியா – இலங்கை இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் நடவடிக்கையையும், மீனவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கையையும் எடுக்கும் எனவும் இந்த நீதிமன்றம் நம்புகிறது.

இந்தியாவின் பல பகுதிகளில் மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்களும் இந்திய குடிமக்களே, அவர்களின் பாதுகாப்பும் முக்கியமானது. அனைத்து மீனவர்களையும் ஒன்றிய அரசு சமமாக, இந்திய மக்கள் என கருதி அவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

The post தாக்கப்படுவதும், கைதாவதும் தொடர்கதையாக உள்ளது தமிழ்நாட்டு மீனவர்களும் இந்திய குடிமக்கள் தான்: ஒன்றிய அரசு சமமாக கருதி மீட்க வேண்டும், ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union government ,ICourt ,Madurai ,Sri Lankan Navy ,Supreme Court ,India ,Tamil Nadu Fishermen Rights Protection ,
× RELATED திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!!