×

தலைமறைவாக உள்ள பாஜ பெண் நிர்வாகிக்கு வலை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்: மொத்த ரவுடிகள் விவரத்தையும் சேகரிக்கும் போலீசார்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள பாஜ பெண் நிர்வாகியை போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில், இந்த வழக்கில் மேலும் சில ரவுடி கும்பல்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால், மொத்த ரவுடிகள் விவரத்தையும் போலீசார் முழுமையாக சேகரித்து வருகின்றனர். மேலும் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கையும் தூசு தட்டி விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி இரவு பெரம்பூரில் வைத்து மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, திருநின்றவூர் பாஜ நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், வழக்கறிஞர் அருள், கோகுல், விஜய், சிவசக்தி, தமாகா இளைஞரணி துணைத் தலைவர் ஹரிஹரன், அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு பகுதி துணைச் செயலாளர் மலர்கொடி, சதீஷ் ஆகிய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி மட்டும் என்கவுன்டரில் இறந்தார். இதில் வட சென்னை பாஜ மகளிரணி துணை செயலாளரான அஞ்சலை தலைமறைவாக இருப்பதால், அவரைத் தேடி வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் கிடைத்து வருகின்றன. கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்குவதற்காக மட்டுமே ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைதான வழக்கறிஞர் அருள் படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் மைத்துனர் என்பதால், ஆற்காடு சுரேஷின் கொலையில் பழிக்குப்பழி வாங்கவே இந்த கொலை சம்பவத்தை அவர் நிகழ்த்தியுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய இயலாது என்பதால் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் கள்ளக் காதலியான பாஜ நிர்வாகி அஞ்சலை ஆகியவர்களோடு சேர்ந்து இதனை அருள் நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வழக்கறிஞர் அருள், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பிரபல தாதாவின் மனைவியும், அதிமுக நிர்வாகியுமான வழக்கறிஞர் மலர்க்கொடியிடம் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கியுள்ளார் என்பதும் விசராணையில் தெரியவந்துள்ளது. இதற்காக பல தவணைகளில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் வங்கியில் பணப் பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், மலர்கொடியின் மகன் வழக்கறிஞர் அழகுராஜா என்பவர் தற்போது கொலை வழக்கு ஒன்றில் சிறையில் இருப்பதால் அவரின் ஜீப்பை அருளுக்கு மலர்க்கொடி கொடுத்து உதவியுள்ளார். மேலும் அருளுக்கு கைதான சதீஷ் என்பவர் தனது பொலிரோ காரை கொடுத்ததும், சென்னையில் கொலையாளிகள் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்து கொடுத்ததும் தற்போது தெரியவந்துள்ளது. அருளும், மலர்க்கொடியும் 2019ம் ஆண்டு ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள சட்டப்பல்கலைக்கழகத்தில் இருவரும் ஒன்றாக படித்துள்ளனர்.

அப்போது முதல் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அந்தப் பழக்கத்தில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அருளுக்கு மலர்கொடி உதவியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமாகா மாணவர் அணி மாநில துணை செயலாளர் ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்சென்னையின் ஏ பிளஸ் ரவுடியான செந்தில் (எ) சம்போ செந்திலும் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

குறிப்பாக வழக்கறிஞரான அருளுக்கு சம்போ செந்திலை அறிமுகப்படுத்தியது ஹரிஹரன்தான் என தெரியவந்துள்ளது. மேலும், ரவுடி சம்போ செந்தில் ரூ.4 லட்சத்தை ஹரிஹரனிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்தப் பணத்தை ஹரிஹரன் அருளுக்கு கொடுத்து, பின் அதனை மலர்க்கொடிக்கு அருள் கொடுத்துள்ளார். ரவுடி சம்போ செந்திலுக்கும், ஆம்ஸ்ட்ராங்குக்கும் இடையே தென்சென்னை கட்டப்பஞ்சாயத்து விவகாரங்களில் பலமுறை மோதல் ஏற்பட்டதும், அதனால் இருவருக்குள்ளும் முன்பகை ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்திலின் பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்க சம்போ செந்திலை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் அவர் தற்போது வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சம்போ செந்திலின் போட்டோ இதுவரை போலீசில் இல்லை. பல சம்பவங்களில் ஈடுபட்டாலும், அவரை பிடிக்க முடியாது என்பதால், போலீஸ் அவரை வழக்கில் சேர்க்காமல் விட்டு விடுவதும், பல வழக்குகளில் நேரடி தொடர்பு இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் சதீஷின் பொலிரோ, மலர்கொடியின் மகன் அழகுராஜாவின் ஜீப், ஹரிஹரனின் கார் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூர் அருகே ஒரு கட்டுமான நிறுவனத்தில் நிலம் தொடர்பான கட்டப்பஞ்சாயத்து நடந்தபோது ஆற்காடு சுரேஷுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் பகை முற்றியதும், ஆற்காடு சுரேஷ் படுகொலைக்குப் பின் அவரது தம்பி பொன்னை பாலு திருவண்ணாமலை அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான இடத்திற்காக கட்டப்பஞ்சாயத்து செய்தபோது, அப்போதும் ஆம்ஸ்ட்ராங்குடன் பொன்னை பாலுவுக்கு நேரடி மோதல் ஏற்பட்டதும் தொடர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தற்போது சிறையில் இருக்கும் பிரபல வடசென்னையைச் சேர்ந்த ரவுடி ஒருவருக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் இடையே சோழவரம் அருகே பலகோடி ரூபாய் மதிப்புள்ள கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பான விவரங்களையும் தற்போது போலீசார் சேகரித்து வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே சீசிங் ராஜா என்ற ரவுடி சம்பந்தப்பட்டுள்ளார் என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது அவருடைய கூட்டாளி சம்போ செந்திலுக்கும் இதில் தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் சென்னையைச் சேர்ந்த பெரிய ரவுடியின் பின்னணி இருப்பதை விசாரணையில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது தலைமறைவாக உள்ள பாஜ பிரமுகர் அஞ்சலை, சம்போ செந்தில் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

* இந்து முன்னணி பிரமுகரிடம் விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சீஸிங் ராஜாவுக்கு தொடர்பு உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்தநிலையில், அவரது கூட்டாளியான வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் கிறிஸ்டோபரிடம் கடந்த 2 நாட்களாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சீனிவாசன், கார்த்திக் ஆகியோரிடமும் சில தகவல்களை போலீசார் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

* ஆற்காடு சுரேஷ் கொலையில் தடயங்களை ஆய்வு செய்யும் போலீசார்
சம்போ செந்தில் உள்ளிட்ட சென்னையின் 3 முக்கிய ரவுடிகளின் கடந்த கால செல்போன் உரையாடல்களின் பின்னணியை போலீசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைப் பின்னணியை விசாரித்த பட்டினப்பாக்கம் போலீசார், அதில் ஆம்ஸ்ட்ராங் தொடர்பு இருப்பதாக எந்தவித விசாரணை அறிக்கையையும் வழங்கவில்லை. எனினும் ஆம்ஸ்ட்ராங் வழக்கின் கொலையாளிகள் வாக்குமூலம் கொடுத்ததைத் தொடர்ந்து, உண்மையை அறிய, ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆற்காடு சுரேஷ் வழக்கில் ஆம்ஸ்ட்ராங்கின் தொடர்பு உள்ளதா என விசாரிக்க அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் கால்ஸ் ரெக்கார்டு உள்ளிட்ட அறிவியல் ரீதியான தடயங்களை மீண்டும் ஆய்வு செய்யும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி மற்றும் அப்போது பணியில் இருந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடமும் பின்னர் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடமும் விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post தலைமறைவாக உள்ள பாஜ பெண் நிர்வாகிக்கு வலை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்: மொத்த ரவுடிகள் விவரத்தையும் சேகரிக்கும் போலீசார் appeared first on Dinakaran.

Tags : Armstrong ,BJP ,CHENNAI ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி...