×

மயிலாப்பூரில் ரகசியமாக நடந்தது 9 வயது சிறுமிக்கு 15 வயது சிறுவனுடன் பெற்றோர் முன்னிலையில் திருமணம்: மாவட்ட சமூகநல அலுவலர் புகாரின்பேரில் போலீசார் விசாரணை

சோழிங்கநல்லூர்: மயிலாப்பூரில் 9 வயது சிறுமிக்கு 15 வயது சிறுவனுடன் ரகசியமாக பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலர் அளித்த புகாரின்படி சிறுமியின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறார்கள் இருவரும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சென்னை, மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதா நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார்.

அதில், கடந்த 13ம் தேதி பணியில் இருந்தபோது, 1098 என்ற எண்ணிற்கு அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர் ஒருவர், கடந்த 12ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோயில் தெருவில், குழந்தை திருமணம் நடந்ததாக தெரிவித்தார். அதன்பேரில், சமூக நல அலுவலரான நான், சம்பந்தப்பட்ட சிறுமி யார் என விசாரித்து, மேற்கு மாம்பலத்தில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று, விசாரணை நடத்தியபோது, சிறுமியின் தந்தை முதலில் இங்கு திருமணம் எதுவும் நடைபெறவில்லை, என மறுத்தார்.

ஆனால் நாங்கள் திருமணம் நடைபெற்றபோது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை காட்டிய போது, அவர் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு மயிலாப்பூரில் உள்ள சிறுவன் வீட்டிற்கு, கடந்த 14ம் தேதி காலை 11 மணிக்கு சென்று விசாரித்தபோது, 9 வயது சிறுமி மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவரும் வீட்டில் இருந்தனர். உடனே அவர்களின் பிறப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது, இருவரும் மைனர்கள் என உறுதியானது. உடனே சிறுமி மற்றும் சிறுவனை மீட்டு கெல்லீஸ் விடுதியில் ஒப்படைத்தோம்.

குழந்தை திருமணம் குறித்து சிறுமி மற்றும் சிறுவன் அளித்த வாக்குமூலத்தின்படி, தனது மகள் 9 வயது சிறுமி என்று தெரிந்தும் சிறுவனுக்கு திருமணம் செய்து கொடுத்த தந்தை ராமகிருஷ்ணன் (எ) குமார் மற்றும் தாய் அக்சயா ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து, மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார், சட்ட விரோதமாக குழந்தை திருமணம் செய்து வைத்த சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் 9 வயது சிறுமிக்கும், 15 வயது சிறுவனுக்கும் திருமணம் நடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post மயிலாப்பூரில் ரகசியமாக நடந்தது 9 வயது சிறுமிக்கு 15 வயது சிறுவனுடன் பெற்றோர் முன்னிலையில் திருமணம்: மாவட்ட சமூகநல அலுவலர் புகாரின்பேரில் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Mylapore ,District Social Welfare Officer ,Choshinganallur ,district ,social welfare ,Dinakaran ,
× RELATED மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி: ஏழு...