×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

 

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அண்மையில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த படுகொலை தொடர்பாக 11 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர். அப்பொழுதே, உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டுமென்ற குரல் ஓங்கி ஒலித்தது. இந்த நிலையில், இந்த கொலை வழக்கின் விசாரணைக் கைதியான குன்றத்தூரைச் சேர்ந்த ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி கொலை வழக்கில் ‘அரசியல் தொடர்பு இல்லை’ என்று சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் தெரிவித்திருந்தாலும், ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அரசியல் தலையீடு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிகிறது. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம், கள்ளத் துப்பாக்கி, வெடி குண்டு, கத்தி போன்றஆயுதங்களை ரெட்டேரி அருகே பதுக்கி வைத்திருந்ததாக கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல் துறையினர் அவரை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அந்த சமயத்தில் காவல் துறையினரின் பிடியில் இருந்து ரவுடி தப்பிவிட்டதாகவும், பின்னர் அந்த ரவுடி ஓர் இடத்தில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு காவல் துறையினர்.

அவரை கைது செய்ய முயன்றபோது துப்பாக்கியால் சுட அந்த ரவுடி முயற்சித்ததாகவும், இந்த நிலையில் தற்காப்புக்காக காவல் துறையினர் திருப்பிச் சுட்டதில் அவர் இறந்துவிட்டதாகவும் செய்தி வந்துள்ளது. இது ஒரு கட்டுக்கதை போன்றுதான் தெரிகிறதே தவிர, இதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். ஒரு விசாரணைக் கைதியை எந்த அளவுக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது காவல் துறையினருக்கு நன்கு தெரியும். இருப்பினும் ரவுடி தப்பிக்க முயன்றபோது என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்றால், இதில் ஏதோ மர்மம் இருப்பதாகவே தோன்றுகிறது. உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. மேற்படி கொலை வழக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும் வகையில், இதனை மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Central Bureau of Investigation ,O. Panneer Selvam ,Chennai ,Tamil Nadu ,Bahujan Samaj Party ,
× RELATED டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு...