×

வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தம் தமிழகத்தில் 21ம் தேதி வரை மழை நீடிக்கும்

சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென் மேற்கு பருவமழை இடையில் தொய்வடைந்த நிலையில் தற்போது தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது.

அதன்காரணமாக கேரள எல்லையோர தமிழ்நாட்டிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்திலும் ஒரு சில இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் மிக லேசான மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்மாக கோவை மாவட்டத்தில் 130 மிமீ மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி 70மிமீ, திருநெல்வேலி, பெரியாறு, தென்காசி, கன்னியாகுமரி பகுதிகளில் 30 மிமீ மழை பதிவாகியுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, மாவட்ட மலைப் பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், ஒன்றிய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதுதவிர நீலகிரி மற்றும் ேகாவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. அதேநிலை 21ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். 17 மற்றும் 18ம் தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தம் தமிழகத்தில் 21ம் தேதி வரை மழை நீடிக்கும் appeared first on Dinakaran.

Tags : Bay of Bengal ,Tamil Nadu ,Chennai ,Kerala ,Bay of Bengal region ,Chennai Meteorological Survey ,
× RELATED தமிழகத்தில மழை நீடிக்கும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது