×

தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு அறிவிப்பு எதிரொலி இன்று அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம்: கர்நாடகாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு அறிவித்துள்ளதையொட்டி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவுக்கு தன்னுடைய கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும் செயல்படுத்த, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி 2018ம் ஆண்டு ஜூன் முதல் இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடி நீரை பெற்றது. தற்போதைய தென்மேற்கு பருவமழை காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பிலிகுண்டுவிலிருந்து கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும்.

நேற்றைய அளவில் (15.07.2024) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டின் மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த சூழலில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். இவ்வாறு தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. காவிரி நீரை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை இன்று (16.07.2024) காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் கூட்டிட உத்தரவிட்டுள்ளேன்.
இந்த கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களை பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

* காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

* தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

* தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

The post தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு அறிவிப்பு எதிரொலி இன்று அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம்: கர்நாடகாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Karnataka government ,Chief Minister ,M.K.Stal ,Karnataka ,Chennai ,Tamil Nadu ,M. K. Stalin ,Water ,Resources ,Minister ,Duraimurugan ,Dinakaran ,
× RELATED ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து