×

ஆம்பூர் பகுதிகளில் சுற்றித்திரிந்த ஒற்றை தந்த யானை வேலூர் எல்லையில் முகாம்

ஒடுகத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வனச்சரக பகுதிகளுக்கு உட்பட்ட சாணாங்குப்பம் காப்புக்காட்டில் சுற்றித்திரிந்த டஸ்கர் என்ற ஒற்றை தந்தம் கொண்ட ஆண் யானை கடந்த 13ம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறி மாதனூர், உடையராஜபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, தென்னை, மா மரம், சப்போட்டா போன்றவற்றை சேதப்படுத்தியது. மேலும் நள்ளிரவு உடையராஜபாளையத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த யானை கீழ் முருங்கை பகுதி வரை 6 கி.மீ. நடந்து சென்றது. பின்னர் மீண்டும் தேசிய நெடுஞ்சாலையிலேயே ஒன்றரை கி.மீ. தூரம் திரும்பி வந்தது. இதனால் போக்குவரத்து தடை ெசய்யப்பட்டு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து யானை வனப்பகுதிக்குள் அனுப்ப வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். மேலும் ஓசூர், பாலக்கோட்டில் இருந்து வனமோதல் தடுப்பு பிரிவு குழுவை சேர்ந்த 7 பேர் வந்தனர். ஆனால் யானையை விரட்டுவதால் ஆபத்து ஏற்படும் என அதன் போக்கிலேயே விட முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் கீழ்முருங்கை பகுதியில் இருந்து வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வனப்பகுதிகளை நோக்கி ஒற்றை தந்த யானை தனது பயணத்தை தொடங்கியது. அப்போது, பாலூர் பகுதியில் காட்டையொட்டி உள்ள விவசாய நிலத்திற்கு சென்று கோழிப்பண்ணை அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு, அங்குள்ள மா மரங்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து யானை வேலூர் மாவட்ட எல்லையோரம் உள்ள காப்புக்காட்டில் முகாமிட்டுள்ளது. தொடர்ந்து ஒடுகத்தூர் மற்றும் ஆம்பூர் வனத்துறையினர் யானையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

The post ஆம்பூர் பகுதிகளில் சுற்றித்திரிந்த ஒற்றை தந்த யானை வேலூர் எல்லையில் முகாம் appeared first on Dinakaran.

Tags : Ambur region ,Vellore ,Odugathur ,Tuskar ,Chananguppam reserve forest ,Ambur forest ,Tirupathur district ,Matanur ,Voderajapalayam ,
× RELATED மாணவிகள் முன் நிர்வாண போஸ் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்