×

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில், மேல்முறையீடு செய்து தகுதி பெற்ற 1.48 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டது!!

சென்னை : கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில், மேல்முறையீடு செய்து தகுதி பெற்ற 1.48 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சுமார் 1.15 கோடி பேர் பயன்பெற்று வந்த நிலையில், மேலும் 1.48 லட்சம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கி வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

இதில் மகளிர் உரிமைத் தொகைக்காக தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் அல்லது விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 11 லட்சம் பெண்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் கடந்த நவம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அமைச்சர்கள், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று கூறினர். இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்து, தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, கலைஞர் உரிமைத் தொகை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில், “கலைஞர் உரிமை தொகைக்காக மேல்முறையீடு செய்தவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் விண்ணப்பத்தாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், நிராகரிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் இ-சேவை மையம் வழியாக மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதம் தோறும் 15ம் தேதி பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில், இன்று புதிதாக மேல்முறையீடு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட1.48 லட்சம் புதியவர்களுக்கும் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில், மேல்முறையீடு செய்து தகுதி பெற்ற 1.48 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...