×

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பாஜ ஆட்சியில் ஒரு சொட்டு கூட பாக்கியில்லாமல் தண்ணீர் வந்தது: அண்ணாமலையின் புதிய பொய்

திருச்சி: தமாகா சார்பில் காமராஜர் 122வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடந்தது. இதில் பாஜ மாநில தலைவர் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: தமிழ்நாடு விவசாயிகள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். 2018ல் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, கர்நாடகாவில் பாஜ ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சேர வேண்டிய தண்ணீர் ஒரு சொட்டு பாக்கியில்லாமல் வந்து சேர்ந்தது.

மேகதாது பிரச்னையை தொடர்ந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு, கடந்த ஆண்டில் இருந்து குறுவை சாகுபடிக்குகூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேகதாதில் அணை கட்டக்கூடாது என்பதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளதை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னை தீர்க்க காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்தது.

இதுதொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. ஆனால், காவிரி மேலாண்மை அமைக்க கூடாது என்று கர்நாடகாவில் இருந்த பாஜ அரசும், ஒன்றிய பாஜ அரசும் முட்டுக்கட்டை போட்டு வந்தது. குறிப்பாக உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தும், அதில் சில சந்தேகங்கள் இருப்பதாக காலம் கடத்தியது.

ஒரு வழியாக நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின் ஆணையம் அமைக்கப்பட்டது. இருந்தும் பாஜ ஆட்சியில் முறையாக தண்ணீர் திறக்கவில்லை.ஆனால் அதை மறைத்து ஒரு சொட்டு பாக்கி இல்லாமல் பாஜ அரசு தண்ணீர் திறந்ததாக இப்போது பச்சை பொய்யை அண்ணாமலை கூறியுள்ளார் என்று விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக அண்ணாமலை பணியாற்றியபோது கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பாஜ ஆட்சியில் ஒரு சொட்டு கூட பாக்கியில்லாமல் தண்ணீர் வந்தது: அண்ணாமலையின் புதிய பொய் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Tamil Nadu ,BJP ,Annamalai ,Trichy ,Kamaraj ,Tamaga ,Trichy Farmers Market ,State ,President ,
× RELATED டெங்குவை தொற்று நோயாக அறிவித்த...