×

தென்காசியில் காதல் மனைவி தூக்கிட்டு சாவு குளுக்கோசில் விஷ ஊசி செலுத்தி சேலம் அரசு டாக்டர் தற்கொலை: 2 முறை காப்பாற்றியும் 3வது முறை உயிரை விட்டார்

சேலம்: காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட விரக்தியில், சேலம் அரசு டாக்டர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டை வாய்க்கால்பட்டறையை சேர்ந்தவர் இனியன் (32). இவர் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 11 மாதத்திற்கு முன்பு சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சவுமியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதி இருவரும் தென்காசியில் வசித்து வந்தனர். ஒன்றரை மாத கர்ப்பிணியான சவுமியா சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கணவரிடம் தெரிவித்தார். அப்போது, இனியன் தனது தாயும் சேலத்தில் தனியாக இருப்பதாகவும் இதனால் தனது தாய் வீட்டுக்கு செல்லும்படியும் சவுமியாவிடம் தெரிவித்துள்ளார். இதில் அவர்களுக்குள் கருத்து மோதல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த சவுமியா கடந்த 6ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இனியனும் தனக்கு ஊசி போட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர்.

பின்னர் சேலம் வந்த, இனியன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர். 10ம் தேதி மனைவி சவுமியாவுக்கு காரியம் செய்தனர். அன்று வீட்டிற்கு வந்த டாக்டர் இனியன், 10 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். அவருக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அவரது அறைக்கு வழக்கம் போல் படுக்கச் சென்றார். நேற்று காலை அவர் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காததால், அவரது அறைக்கு சென்று குடும்பத்தினர் பார்த்தனர். அப்போது, அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் எஸ்.ஐ.ராமமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், குளுக்கோசில் விஷ ஊசியை செலுத்திய இனியன், அந்த குளுக்கோசை தனது உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. காதல் மனைவி இறந்த வேதனையில் இருந்து வந்த அவர் 2 முறை தற்கொலைக்கு முயன்றும் முடியாததால் மனைவியின் காரியம் முடிந்ததும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில்தான் அவர், எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்ற முழுவிவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

The post தென்காசியில் காதல் மனைவி தூக்கிட்டு சாவு குளுக்கோசில் விஷ ஊசி செலுத்தி சேலம் அரசு டாக்டர் தற்கொலை: 2 முறை காப்பாற்றியும் 3வது முறை உயிரை விட்டார் appeared first on Dinakaran.

Tags : Salem government ,Tenkasi ,Salem ,Inian ,Waikalpattara ,Salem Ammapet ,Kalingapatti Government ,
× RELATED சேலம் அரசு மருத்துவமனையில் ஓராண்டில்...