×

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று 3வது நாளாக ஆலோசனை: நிர்வாகிகள் யாரிடமும் பேச அனுமதிக்கவில்லை

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்தது ஏன்? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று 3வது நாளாக ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளை யாரிடமும் பேச அதிமுகவினர் அனுமதிக்கவில்லை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 10ம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது ஏன்? என்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது. நேற்று 2வது நாள் கூட்டத்தில், சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இன்று 3வது நாளாக அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் அந்த தொகுதி முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி காலை 9 மணி முதல் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், பங்கேற்ற நிர்வாகிகள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று, கூட்டத்திற்கு வரும்போதே அந்த மாவட்ட செயலாளர் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரிடமும் பேசக்கூடாது என்று கூறியே அழைத்து வந்திருந்தனர். அதேபோன்று, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவரையும் பேச அனுமதிக்கவில்லை. மாவட்ட செயலாளர் அனுமதிக்கும் ஒரு சிலர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டதால் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர்.

 

The post நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று 3வது நாளாக ஆலோசனை: நிர்வாகிகள் யாரிடமும் பேச அனுமதிக்கவில்லை appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,ADMK ,Tamil Nadu ,AIADMK ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் காவல்துறையினர் உள்பட...