×

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் கார் கவிழ்ந்து மூழ்கியதில் செக்யூரிட்டி பலி: டிரைவர் படுகாயம்

வேளச்சேரி: பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் கார் கவிழ்ந்து கிடப்பதாக பள்ளிக்கரணை காவல்நிலைய போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. அதன்படி ரோந்து போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கார் ஏரியில் மூழ்கி கிடந்ததை பார்த்தனர். பின்னர், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் காரை கரைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது காருக்குள் செக்யூரிட்டி உடையணிந்திருந்த ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். டிரைவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். உடனடியாக டிரைவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் செக்யூரிட்டி பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், கார் டிரைவர் ராஜசேகர் (35) என்பதும், சிறுசேரியில் உள்ள ஐடி கம்பெனி ஊழியர்களை தனது காரில் தினந்தோறும் ஏற்றிச்சென்று வீட்டில்விடுவது, கம்பெனி அழைத்து வரும் பணியை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 1.30 மணி அளவில் பாதுகாப்புக்காக வரும் ஐடி கம்பெனி செக்யூரிட்டி பீகாரை சேர்ந்த கவுசல் மற்றும் ஊழியர்களை ஏற்றி பல்லாவரத்தில் விட்டுவிட்டு மீண்டும் செக்யூரிட்டி கவுசல் மற்றும் டிரைவர் ஆகியோர் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக காரில் சிறுசேரிக்கு திரும்பியுள்ளனர். இன்று காலை 5.30 மணி அளவில் நாராயணபுரம் ஏரி அருகே வந்தபோது டிரைவர் ராஜசேகரின் கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென ஏரியில் பாய்ந்து மூழ்கியுள்ளது தெரியவந்தது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் கார் கவிழ்ந்து மூழ்கியதில் செக்யூரிட்டி பலி: டிரைவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Pallikaranai Narayanapuram lake ,Pallikaranai Police Station ,Pallikaran Traffic Investigation Division ,Dinakaran ,
× RELATED தாம்பரம் காவல் ஆணையரகத்தில் 8 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்