×

திட்டக்குடி அருகே டயர் வெடித்து மரத்தில் கார் மோதி பொறியாளர் பலி

*மனைவி படுகாயம்

திட்டக்குடி : கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிங்ஸ் டவர் வடக்கு சன்னதி பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் நடராஜன் (57). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பராமரிப்பு பிரிவில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இந்திரா (48). இவர்களுக்கு தேவதா (25), தரண்யா (20) என 2 மகள்கள் உள்ளனர். தேவதா பொறியியல் படிப்பு முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தரண்யா பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தரண்யாவை பெரம்பலூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் விட்டுவிட்டு நடராஜன், அவரது மனைவி இந்திரா ஆகியோர் காரில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். திட்டக்குடி இடைச்செருவாய் அருகே சென்றபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் இடது பக்க சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வலது பக்க சாலையில் இருந்த புளியமரத்தின் மீது மோதியது.

இதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மனைவி இந்திரா படுகாயங்களுடன் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தின்போது புளிய மரத்தின் அருகே மொபட்டை நிறுத்திவிட்டு செல்போன் பேசிக் கொண்டிருந்த இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் பாலுசாமி என்பவருக்கும் காயம் ஏற்பட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திட்டக்குடி அருகே டயர் வெடித்து மரத்தில் கார் மோதி பொறியாளர் பலி appeared first on Dinakaran.

Tags : Phetakkudi ,Patugayam Thitakkudi ,Sokkalingam ,Natarajan ,Chidambaram King's Tower North Sannathi ,Cuddalore district ,Chidambaram Annamalai University ,Indira ,Thitakudi ,Dinakaran ,
× RELATED பெண்ணை கத்தியால் குத்தி கொன்று தூக்குபோட்டு முதியவர் தற்கொலை