×

உத்தமபாளையம் அருகே 2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

தேவாரம் : உத்தமபாளையம் அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், உத்தமபாளையம் அடுத்த கோம்பை அருகே சாலைமலைக்கரடு பகுதியில் விவசாயிகள் உழுது கொண்டிருந்தபோது, பழமையான, முதுமக்கள் தாழியின் உடைந்த மண்கலன்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து கோம்பை சமூக ஆர்வலர் பிரகாஷ் கொடுத்த தகவலின்பேரில், உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி முன்னாள் பேராசிரியர் வர்கீஸ் ஜெயராஜ், ஆசிரியர்கள் முத்தழகு, பாஸ்கரன், நாகராஜ், குமரேசன் ஆகியோர் அங்கு சென்று, கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழி சிதைந்தபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை ஆய்வு செய்த வரலாற்று ஆசிரியர்கள் கூறுகையில், “2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மனிதர்கள் இறந்தவுடன், அவர்களை அடக்கம் செய்ய மிகப்பெரிய முதுமக்கள் தாழி மற்றும் மண்கலன்களை பயன்படுத்தியுள்ளனர். இவர்களை பெருங்கற்கால மக்கள் என அழைக்கின்றனர். கோம்பை சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான ஊராகும். இதன் மேற்குப்பகுதியில் சாலைமலைக்கரடு என அழைக்கப்படும் சிறு மலைப்பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள கல்வட்டம் என்னும் இடத்தில் நிலத்தை விவசாயிகள் உழும்போது, உடைந்த முதுமக்கள் தாழி, மண்கலன்கள், பலகை கற்கள் மற்றும் ஈம மண்கலன்கள் கிடைத்தன.

முதுமக்கள் தாழியின் கழுத்துப்பகுதியில் கயிறு போலவும், நெல் மணி போலவும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த அலங்காரங்கள் தாழிகளை சுடுவதற்கு முன்பு செய்யப்பட்டுள்ளது. தாழிகளில் இறந்தவர்களின் தேவைக்காக, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்படும். இதன்படி, இங்கு கிடைத்த முதுமக்கள் தாழியில் ஈம மண்கலன்களான தட்டு, தண்ணீர் கிண்ணம், குவளை, மண்கிண்ணம் ஆகியவை உடையாமல் கிடைத்துள்ளன. இவற்றில் 14 செ.மீ, உயரமுடைய சிறிய கலயமும் கிடைத்துள்ளது.

இம்மண்கலன்கள் உடல் அகன்றும், வாய், அடிப்பகுதி குறுகிய வடிவிலும் காட்சி தருகிறது. மண்கலன்கள் அனைத்தும் வெளிப்புறம் சிவப்பாகவும், உட்புறம் கருப்பாகவும் உள்ளது. மண்கலன்கள் சுடுவதற்கு முன் காவி அல்லது சிவப்பு நிறம் பூசப்படுவதால் வழுவழுப்பான தோற்றமுடையதாக உள்ளது. இங்கு கிடைக்கும் பொருட்களை வைத்து பார்க்கும்போது, இங்கு மனிதன் நாகரீகம், பண்பாட்டுடன் வாழ்ந்தது தெரிய வருகிறது. இங்கு தொல்பொருள் ஆராய்ச்சி செய்தால் இன்னும் பல அரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post உத்தமபாளையம் அருகே 2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Uttamapalayam ,Utthampalayam ,Salimalaikaradu ,Gombai, Theni district ,Gompai ,Uttampalayam ,
× RELATED மதுரை சிறையில் ஆயுள்தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!!