×

வைக்கம் பெரியார் நினைவக புனரமைப்பு அமைச்சர் சாமிநாதன் ஆய்வு: முதல்வரால் ஆகஸ்ட் 15க்குள் திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்திலுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித் துறையின் மூலம் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் நூலக விரிவாக்கம் செய்யும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சதீஷ்குமார், மோகனகிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் கேரள மாநில தொடர்பு அலுவலர் ஆர்.உன்னிகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அளித்த பேட்டி: 1924ம் ஆண்டு வைக்கத்தில் உள்ள கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம். இதற்காக அப்பகுதி தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள். முக்கிய தலைவர்கள் கைதான நிலையில் போராட்டத்தை தொடர்ந்து, பெரியார் வைக்கம் சென்று அந்தப் போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தினார். அதன் நினைவாக, 1985 ஆண்டு கேரள அரசு வழங்கிய நிலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டது. மேலும், அங்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நூலகம், அவர் பயன்படுத்திய பொருட்கள், அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள், வைக்கப்பட்டிருந்தது.

நினைவகம் கட்டப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆனதால், அதனை இன்றைய காலகட்டத்திற்கு ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டார். இப் புனரமைப்பு பணிகளுடன், அதிக புத்தகங்களை கொண்டதாக நூலகம் விரிவுப்படுத்தப்பட்டு அமைக்கப்பட உள்ளது. மேலும், பெரியாரின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக விடுபட்டிருந்த புகைப்படங்களும் நிறுவப்பட உள்ளது. காந்தியின் உத்தரவை ஏற்று பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். இது ஒரு சமூகநீதி போராட்டமாக கருதப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன்பேரில், வைக்கம் பெரியார் நினைவகத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். ஏறத்தாழ 95 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டன. பெயிண்டிங், மின் இணைப்பு பணிகள் மழையின் காரணமாக தாமதம் ஆகியுள்ளன. விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் தமிழ்நாடு முதல்வரால் நினைவகம் திறந்து வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வைக்கம் பெரியார் நினைவக புனரமைப்பு அமைச்சர் சாமிநாதன் ஆய்வு: முதல்வரால் ஆகஸ்ட் 15க்குள் திறக்கப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vaikam Periyar Memorial ,Minister ,Saminathan ,Chief Minister ,Chennai ,Government of Tamil Nadu ,Public Works Department ,Father Periyar Memorial ,Vaikam, Kottayam District ,Kerala State ,Tamil Development ,Dinakaran ,
× RELATED தமிழ் திரையுலகில் பாலியல் தொடர்பான...