×

போலி பாஸ்போர்ட், தங்க கடத்தல் ஆசாமிகளுக்கு உடந்தை சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர் சஸ்பெண்ட்: தலைமை ஆணையர் அதிரடி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்களில் பயணிப்பவர்களுக்கும், தங்க கடத்தல் ஆசாமிகளுக்கும் துணை போனதாக குடியுரிமை அலுவலரை சஸ்பெண்ட் செய்து தலைமை ஆணையர் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில், வெளிநாடு செல்லும் விமான பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து அனுப்புவதற்காக குடியுரிமை பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த பிரிவின் தலைமை அலுவலகம், சென்னை சாஸ்திரி பவனில் உள்ளது. இந்த பிரிவில் பணியாற்றுவதற்கு காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள், டெபிடேஷன் முறையில் பணி அமர்த்தப்படுகின்றனர். அவ்வாறு பணியமர்த்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் சரவணன் என்பவர், கடந்த ஓராண்டு காலமாக சென்னை விமான நிலைய குடியுரிமை பிரிவில் இமிகிரேஷன் அலுவலராக பணியாற்றி வந்தார். இந்த இமிகிரேஷன் பிரிவில் உள்ள அலுவலர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் நேர்மையாக பணியாற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க, லஞ்ச ஒழிப்பு துறை பிரிவு செயல்பட்டு வருகிறது.

இந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கண்காணிப்பின் போது, இமிகிரேஷன் அலுவலர் சரவணன் செயல்பாட்டில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தீவிரமாக கண்காணித்தனர். மேலும் இமிகிரேஷன் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது சரவணன், வெளிநாடுகளுக்கு செல்ல வரும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் பரிசோதிக்கும் போது, முறைகேடுகளில் ஈடுபடுவதும், வெளிநாடுகளில் இருந்து கடத்தல் பொருட்களை கொண்டு வரும் பயணிகளுக்கு உதவியதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சரவணனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது.

வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் ஆசாமிகள், சுங்கச் சோதனைக்கு முன்னதாக, குடியுரிமை சோதனைக்காக, இமிகிரேஷன் பிரிவுக்கு வருவார்கள். அப்போது அவர்கள் கடத்தி வரும் தங்கத்தை, சரவணன் வாங்கி வைத்துக் கொண்டு, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் செல்வதற்கு உதவி புரிந்ததும் தெரியவந்தது. இதுபற்றி சாஸ்திரி பவனில் உள்ள, இமிகிரேஷன் பிரிவு தலைமை ஆணையருக்கு அறிக்கை அனுப்பினர். அதன்பேரில், சரவணனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தலைமை ஆணையர் உத்தரவிட்டார்.

இதனிடையே சென்னை விமான நிலைய சுங்கத்துறை மற்றும் ஒன்றிய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளும் இதுதொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுங்கத்துறை தரப்பில் கூறுகையில், ‘‘இமிகிரேஷன் அலுவலர் சரவணன் செயல்பாடுகள் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் விசாரணை இன்னும் முடியவில்லை. அவர்கள் விசாரணை முடிந்து, முறையான அறிக்கை கொடுத்த பின்பு, நாங்கள் இதில் தங்கம் கடத்தல் குறித்து விசாரணை மேற்கொள்வோம்,’’ என்றனர். சென்னை விமான நிலையத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் குடியுரிமை அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு அலுவலரே, முறைகேடான வகையில் செயல்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post போலி பாஸ்போர்ட், தங்க கடத்தல் ஆசாமிகளுக்கு உடந்தை சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர் சஸ்பெண்ட்: தலைமை ஆணையர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,CHENNAI ,Chief Commissioner ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்