×

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இழுபறி: ஆசிரியர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்காமல், ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க நிர்வாகிகள், உயர்கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் பிரேம்குமார், வரலாற்றுத் துறையில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, தனது அறிக்கையினை சமர்ப்பித்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. பல்கலைக் கழக சாசன விதிகளின்படி 3 மாதங்களுக்கு மேல் ஒருவரை பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது. இதேபோல், தமிழக அரசின் பணியாளர் நடத்தை விதிகளுக்கும், பெரியார் பல்கலைக்கழக சாசன விதிகளுக்கும் முரணாக உள்ள இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான மதிப்பெண் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாக அனுப்பப்படும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்களின் பதவி உயர்வானது பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பல்கலைக்கழகத்தில் உள்ள இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் 40 பேருக்கு பேராசிரியராக பதவி உயர்வு வழங்க, கடந்த ஓராண்டிற்கு முன்பு நேர்காணல் நடத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் சிண்டிகேட்டில் வைத்து அதற்கு ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், இதுவரை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. நிலுவையும் கிடைக்காது என்பதால், ஆசிரியர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதனை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். முனைவர் பட்டங்களை வழங்குவதற்கு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்களது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையினை ஒரு முன்னணி ஆய்வேடுகளிலும், பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டக் கூடிய ஆய்வேடுகளிலும் வெளியிட்டால் போதுமானது.

பல்கலைக் கழக மானியக் குழு வகுத்துள்ள இந்த விதிதான், நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், தமிழகத்தில் உள்ள பிற பல்கலைக் கழகங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் மட்டும் பன்னாட்டு அளவிலான ஆய்வேடுகளில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளனர். இதற்கு அதிகளவில் செலவு ஏற்படும் என்பதால், பெரும்பாலான முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வேடுகளை சமர்ப்பிக்க முடியாமல், பாதியிலேயே படிப்பை நிறுத்தி உள்ளனர். எனவே, பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை மட்டும் கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வில், விஸ்வநாதமூர்த்தியை பதிவாளராக்க சிண்டிகேட் ஒப்புதல் வழங்கவில்லை. ஆனால் தற்போது அவரை பதிவாளராக (பொறுப்பு) வைத்திருப்பது, ஆட்சிக் குழுவின் தீர்மானத்திற்கு எதிரானது. எனவே ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள ஒருவரை பொறுப்பு பதிவாளராக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

 

The post சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இழுபறி: ஆசிரியர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Salem ,University of Salem Periyar ,Salem Periyar University Teachers Association ,Secretary of ,Higher ,Education Department ,Peryar University Teachers' Association ,Teachers Association ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது குற்றவியல் வழக்கு