×

நீட் ஆள்மாறாட்டம்: போலியாக தேர்வு எழுதியவர்கள் விபரங்களை தேசிய தேர்வு முகமை கொடுக்க மறுக்கிறது; சிபிசிஐடி அறிக்கை

மதுரை: மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு என்பது கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வு நடைமுறை படுத்தப்பட்ட ஆண்டு முதல் பல்வேறு சர்ச்சைகளும் ஊழல்களும் வெளியாகியுள்ளது. குறிபாக இந்த நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் இருந்து பல்வேறு எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றது.

தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாணவர்களுக்காக வெளிமாநிலங்களில் தேர்வெழுதி ஆள்மாறாட்டம் செய்து சேலம், தருமபுரி, சென்னை, தேனி உள்ளிட்ட அரசு மருத்துவகல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில், முதலில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது இது போன்று சேர்ந்த மாணவர்களுகாக வெளிமாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு என்பது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையை சேர்ந்த குமார் என்பவர் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இது சம்பந்தமாக அறிக்கை தாக்க செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில், சிபிசிஐடி ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், இந்த வழக்கில் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், புரோக்கர்களாக செயல்பட்ட கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 27 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தருமபுரியை சேர்ந்த ஒரு மாணவருக்காக 3 மாநிலத்தில் நீட் தேர்வு எழுதியதும் தெரியவந்துள்ளது.

பல்வேறு மாணவர்களுக்கு கேரளா, உத்திரகாண்ட், கேரளா ஜார்க்கண்ட், கொல்கத்தா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். அந்த மதிப்பெண்னை வைத்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவகல்லூரியில் மாணவர்கள் இடம்பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விசாரணை 90% நிறைவு பெற்றுள்ளது. இந்த விசாரணையில் மாணவர்களுக்காக போலியாக தேர்வு எழுதியவர்கள் யார் என்பது குறித்த விபரம் தேசிய தேர்வு முகமையிடம் உள்ளது. இந்த விவரங்களை 2021-ம் ஆண்டு முதல் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இதுவரை அந்த தகவலை நீட் தேர்வு முகமை அந்த தகவலை தரவில்லை என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

 

The post நீட் ஆள்மாறாட்டம்: போலியாக தேர்வு எழுதியவர்கள் விபரங்களை தேசிய தேர்வு முகமை கொடுக்க மறுக்கிறது; சிபிசிஐடி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : NEET ,National Examinations Agency ,CBCIT ,Madurai ,Tamil Nadu ,National Examination Agency ,CBCID ,Dinakaran ,
× RELATED நீட் முதுநிலை தேர்வில் டாக்டர் தந்தையை விட அதிக மதிப்பெண் எடுத்த மகன்