×

புதுவண்ணாரப்பேட்டையில் கடன் பிரச்னையால் மகனை கழுத்தை நெரித்து கொன்று கணவன், மனைவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவாஜி (45). இவரது மனைவி வனிதா (32). இவர்களது மகன் வெற்றிவேல் (10). சிவாஜி, புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெரு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 6 வருடமாக குடும்பத்துடன் வசித்து வந்தார். பூண்டி தங்கம்மாள் தெருவில் தையல் கடை வைத்துள்ளார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தையல் கடையை விட்டுவிட்டு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். வனிதா, வீட்டின் அருகிலுள்ள பைப் விற்பனை கடையில் வேலை செய்து வந்தார். வெற்றிவேல் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். நேற்று காலை வெகுநேரம் ஆகியும் இவர்கள் யாரும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த எதிர்வீட்டுக்காரர் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது சிவாஜியும், வனிதாவும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது, தம்பதி தூக்கில் பிணமாக தொங்கினர். அருகில் அவர்களது மகன் வெற்றிவேல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். இதையடுத்து, தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கி கிடந்த சிறுவனை மீட்டு அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனிடையே, போலீசாரின் சோதனையில் வீட்டில் வனிதா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், `எங்களுக்கு அதிகளவு கடன் உள்ளது. கடனை எங்களால் கட்ட முடியவில்லை. இதனால் வாழ்வை முடித்துக்கொள்கிறோம்’ என குறிப்பிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். சிறுவனின் கழுத்தில் காயம் இருந்ததால் அவனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்தார்களா அல்லது கந்து வட்டி காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர். …

The post புதுவண்ணாரப்பேட்டையில் கடன் பிரச்னையால் மகனை கழுத்தை நெரித்து கொன்று கணவன், மனைவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Puduvannarapet ,Chennai ,Shivaji ,Villupuram district ,Vanitha ,Vetrivel ,Puduvannarappet ,
× RELATED ரேவண்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை