×

ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த குழு ஒன்றிய அரசின் 3 புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, என்னென்ன திருத்தங்களை கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா, 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023” மற்றும் “பாரதிய சாக்ஷியா சட்டம், 2023” என மாற்றப்பட்டு, கடந்த 1ம் தேதி முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும், அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இதுதவிர, நாடாளுமன்றத்தில் 146 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை அறிந்துகொள்ள விருப்பமில்லாமல், ஒன்றிய அரசு அவசர கோலத்தில் இச்சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஏதுமின்றி, கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றியது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையினரின் கருத்தினை பிரதிபலிக்கும் வகையில், இந்த புதிய சட்டங்களில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பதை தெளிவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 17ம் தேதி தனது கடிதத்தின் வாயிலாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஒன்றிய அரசின் இந்த புதிய சட்டத்தின் சில அடிப்படைப் பிரிவுகளில் தவறுகள் இருப்பதோடு, மாநில அரசுகளிடமிருந்து முழுமையாக கருத்துகளை பெறாமல் இவை இயற்றப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை ஒன்றிய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும், முறையாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளை பெற்ற பின்னரே இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த புதிய சட்டங்களில் என்னென்ன சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை முதன்மை செயலாளர் அமுதா, பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், சட்டத்துறை செயலாளர் ஜார்ஸ், காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில், இந்த புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைத்திட, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழுவினை அமைத்திட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த குழு ஒன்றிய அரசின் 3 புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களை கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Justice ,Satyanarayan ,Union Govt ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,M.K. ,Union Government ,Stalin ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED மூத்த வழக்கறிஞர் வில்சன் பற்றிய...