×

திருவேங்கடத்தில் பரபரப்பு குடும்ப பிரச்னையால் காதல் மனைவி தற்கொலை

*துக்கம் தாங்காமல் டாக்டர் தற்கொலை முயற்சி

திருவேங்கடம் : திருவேங்கடத்தில் குடும்ப பிரச்னையால் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், துக்கம் தாங்காமல் டாக்டர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்டம் ஸ்ரீ வாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் இனியவன் (33). இவர் கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்தாண்டு இனியவன் வீடு கட்டுவதற்காக சேலத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வங்கியில் பணியாற்றிய சேலம் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த செங்கோட்டுவேல் மகள் சவுமியா (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதுகுறித்து இருவரும் வீட்டில் தெரிவித்த நிலையில் இரு வீட்டாரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த 2023 நவம்பர் மாதத்தில் திருமணம் முடிந்து வேலை நிமித்தமாக தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அக்ரஹாரம் தெருவில் வீடு வாடகைக்கு பிடித்து கணவன், மனைவியும் வசித்து வந்தனர். இனியவன் அங்கிருந்து திருவேங்கடம் அருகில் உள்ள கலிங்கப்பட்டி அரசு மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் இனியவன் பயிற்சிக்காக ஆறு மாதங்களுக்கு மேல் வெளியே தங்கியிருக்க வேண்டி இருப்பதால் தனது தாய் வீட்டில் சென்று இருக்குமாறு சவுமியாவிடம் கூறியுள்ளார். இதற்கு சவுமியா மறுப்பு தெரிவித்து தனது தாய் வீட்டுக்கு தான் செல்வேன் எனக்கூறியுள்ளார். இதனால் நேற்று இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் கணவரிடம் கோபித்துக்கொண்ட சவுமியா தனி அறையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை பால்காரர் பால் கொண்டு வந்து வீட்டின் வெளியே நின்று அழைத்தபோது சவுமியா எழுந்து வரவில்லை. இதையடுத்து இனியவன் பாலை வாங்கி வைத்துவிட்டு சவுமியாவை கதவை தட்டி அழைத்துள்ளார். ஆனால் அவர் பதில் எதுவும் கூறவில்லை. இதனால் பயந்து போன மருத்துவர் இனியவன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சவுமியா அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதைபார்த்து இனியவன் அதிர்ச்சியடைந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சவுமியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சவுமியாவின் சகோதரர் நந்தகுமார் திருவேங்கடம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி ஒரே ஆண்டு ஆகாததால் சங்கரன்கோவில் துணை கலெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மருத்துவர் இனியவன் மருந்து எதுவும் இல்லாமல் வெறும் ஊசியை மட்டும் செலுத்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்ட போலீசார் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திருவேங்கடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருவேங்கடத்தில் பரபரப்பு குடும்ப பிரச்னையால் காதல் மனைவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruvenkadam ,Salem District Sri Wari Garden ,
× RELATED வட்டார தடகள போட்டியில் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளி சாதனை