*450 கிலோ பறிமுதல்
சூலூர் : கோவை மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் தீவிரமாக சோதனை செய்து புகையிலைப் பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையுடன் விற்பனை செய்யும் நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று காலை சூலூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நீலாம்பூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்த நிறுத்தினர். இருப்பினும் அந்த கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது. இதனை தொடர்ந்து அந்த காரை துரத்திச் சென்று அவினாசி சாலையில் மடக்கிப் பிடித்தனர். பின்னர் காரில் இருந்து நபரை பிடித்து விசாரணை நடத்தி காரில் சோதனை மேற்கொண்டபோது மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார், காருடன் வந்த நபரை சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பகத்சிங் (42) என்பதும், இவர் மயிலம்பட்டி பகுதியில் வசித்து வருவதும், கர்நாடகாவில் இருந்து புகையிலைப் பொருட்களை வாங்கி வந்து கோவையில் இருக்கும் கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த சொகுசு கார் மற்றும் 450 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் பகத்சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post காரில் புகையிலை பொருட்கள் கடத்திய ராஜஸ்தான் வாலிபர் கைது appeared first on Dinakaran.