×

சிறுவன் உள்பட 5 பேர் அதிரடி கைது

 

கடலூர், ஜூலை 8: கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியை சேர்ந்தவர் சிவசங்கர் (43). பாமக பிரமுகரான இவர் வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளராக இருந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் சிவசங்கர் தனது மனைவி தனலட்சுமியுடன் வீட்டின் முன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது சிவசங்கரின் வீட்டுக்குள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவசங்கர் தப்பியோட முயன்றார்.

இருப்பினும் சிவசங்கரை அக்கும்பல் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சிவசங்கர் கீழே விழுந்தார். இதனை பார்த்த அவரது மனைவி தனலட்சுமி கூச்சல் போடவே அக்கும்பல் பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பாதிரிப்புலியூர் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

கடலூர் எஸ்பி ராஜாராம் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பிரபு மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், எஸ்.என்.சாவடியை சேர்ந்த மகாலிங்கம் மகன்கள் சிவசங்கர், விஜய், பிரபு ஆகியோருக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்க பாண்டியன், சதீஷ், வெங்கடேசன் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக சிவசங்கரின் தம்பி பிரபுவை, சதீஷ் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் கடந்த 28.2.2021ம் ஆண்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.

இந்த வழக்கில் சிவசங்கர் முக்கிய சாட்சியாக இருப்பதாலும், வழக்கை முன்னின்று நடத்துவதாலும், இதனால் ஆபத்து ஏற்படும் என நினைத்து சிவசங்கரை கொலை செய்ய சதீஷ், வெங்கடேசன் கொண்ட கும்பல் சதித்திட்டம் தீட்டி கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் சிவசங்கரை வெட்டி கொல்ல முயன்ற கும்பல் திருவந்திபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அப்பகுதியில் பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.

அப்போது போலீசிடமிருந்து தப்பியோடிய 2 பேருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டது. பின்னர் அக்கும்பலை போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில், எஸ்.என்.சாவடி பகுதியை சேர்ந்த முருகன் மகன் சதீஷ் (27), ராமச்சந்திரன் மகன் வெங்கடேசன் (28), மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் முகிலன் (19), செம்மண்டலம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் ராஜ் (எ) ராஜ்கிரண் (34) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுவன் உள்பட 5 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Sivashankar ,Surappanayakan Chavadi ,Vanniyar Sangh ,Thanalakshmi ,
× RELATED கஞ்சா பொட்டலத்தை தொடர்ந்து கடலூர்...