×

திருக்கோவிலூரில் இன்று அதிகாலை மின்மாற்றி வெடித்து பயங்கர தீ விபத்து

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் இன்று அதிகாலை மின்மாற்றி வெடித்ததில் தீப்பிடித்து தெருவோர கடைகள் தீயில் நாசமானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆர் சிலை பக்கத்தில் மின்மாற்றி உள்ளது. இதன் மூலமாக திருக்கோவிலூரின் முக்கிய பகுதியான வடக்கு தெருவுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென இந்த மின்மாற்றி வெடித்து சிதறியதால் தீ பற்றி எரிந்தது. மின்மாற்றியில் இருந்த ஆயில் சிதறியதால் அருகே இருந்த தெருவோர கடைகளுக்கு தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 4 தெருவோர கடைகள், பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்யும் கங்கா என்பவரின் ஸ்கூட்டி, ஒரு தள்ளுவண்டி ஆகியவை முழுவதும் எரிந்து நாசமானது.

திருக்கோவிலூர் மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மின் இணைப்பை துண்டித்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக திருக்கோவிலூர் பகுதி முழுவதும் சுமார் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

The post திருக்கோவிலூரில் இன்று அதிகாலை மின்மாற்றி வெடித்து பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Terrible fire accident ,Thirukovilur ,MGR ,Tirukovilur ,station ,Kallakurichi district ,North Street ,fire ,
× RELATED வங்கி பெண் அதிகாரி கொலை விவகாரம்...