×

திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

*புகை மண்டலத்தால் சூழல் பாதிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல்-திருச்சி ரோடு நான்கு வழி சாலை ஓரங்களில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு உடல் நல பாதிப்பும், சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில், அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் அருகே ரோட்டின் இருபுறமும் குப்பைகளை கொட்டுகின்றனர். இதற்குக் காரணம் அந்த ரோட்டில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடைய ஷோரூம் உள்ளது. அங்கு விற்பனையாகும் வாகனங்களில் உதிரி பாகங்களுக்கான பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் குப்பைகளை ரோட்டின் இருபுறமும் அதிக அளவு கொட்டி செல்கின்றனர். ரோட்டோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பையில், சிலர் தீ வைத்து விடுகின்றனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இதனால் சுற்றுப்புற பகுதியில் வீடுகளில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். வீட்டில் உள்ள சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மிகவும் சிரமம் அடைகின்றனர். புகையினால் சுவாசம் விட முடியாமல் மூச்சுத் திணறல் மற்றும் உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும் வாகனங்களில் ரோட்டில் செல்வது கூட தெரியாத அளவிற்கு புகை மண்டலமாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் குப்பையை தீ வைப்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பாதிப்படைகின்றனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், “திண்டுக்கல் திருச்சி ரோட்டில் ஏராளமான நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உடைய ஷோரூம் உள்ளது. இங்கிருந்து கொட்டப்படும் குப்பைகள் தான் ரோட்டில் அதிக அளவு சிதறி கிடக்கிறது. இதனை வழியில் செல்வோர் தீவைத்து விடுவதால், குப்பையில் இருந்து துர்நாற்றம் மற்றும் புகையால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில், ஊராட்சி நிர்வாகத்தினர் இதை கவனத்தில் எடுத்து குப்பைகளை கொட்டுவோர் மீதும், குப்பைகளை எரித்து பாதிப்பை ஏற்படுத்துவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டாமல் தடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Dindigul-Trichy highway ,Dindigul ,Dindigul-Trichy ,road ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்-கரூர் ரோடு...