×

தகாத உறவை கண்டித்ததால் புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை: காதலனுடன் மனைவி கைது

போச்சம்பள்ளி: தகாத உறவை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவி, காதலனுடன் சேர்ந்து புதுமாப்பிள்ளையை சரமாரியாக அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே காவேரிப்பட்டணம் பாலேகுளி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (25). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுஜாதா(19). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணமானது. திருமணம் நடந்து சில மாதங்களுக்குள், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை ராம்குமார் தனது வீட்டில், கழுத்தில் மின்சார ஒயர் இறுக்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், உடனடியாக நாகரசம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ராம்குமாரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் ராம்குமாரின் மனைவி சுஜாதாவை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சுஜாதாவுக்கு சூளகிரியை சேர்ந்த கணேசன்(19) என்பவருடன், தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்த ராம்குமார், தகாத உறவை கைவிடும்படி கூறி, மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், காதலனுடன் சேர்ந்து கணவனை சரமாரியாக அடித்து, ஒயரால் கழுத்தை இறுக்கி கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக, சுஜாதா, கணேசன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த கணேசனின் நண்பர் மோகன்(18) ஆகிய 3 பேரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் ஏடிஎஸ்பி சங்கு, பர்கூர் டிஎஸ்பி பிருத்விராஜ் செளகான் ஆகியோரும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தகாத உறவை கண்டித்ததால் புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை: காதலனுடன் மனைவி கைது appeared first on Dinakaran.

Tags : Bochampally ,Ramkumar ,Kaveripattanam Baleguli ,Bochampalli ,Krishnagiri district ,Hosur ,
× RELATED புகையிலை பொருட்கள் பறிமுதல்