×

காதலை கைவிடாததால் ஆத்திரம்: கழுத்தை வெட்டி டிரைவர் படுகொலை

* தலை ஓடையில் வீச்சு; பிரபல ரவுடி கைது
* ஆணவக்கொலை என குடும்பத்தினர் புகார்

மதுரை: காதல் பிரச்னையில், நண்பரின் கழுத்தை வெட்டி கொலை செய்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே வி.வெங்கடாசலபுரத்ைதச் சேர்ந்தவர் பிரபாகரன் (25). பிரபல ரவுடி. தனது தாய் பிறந்த ஊரான விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்திற்கு பிரபாகரன் அடிக்கடி செல்வார். அதே ஊரைச் சேர்ந்த அழகேந்திரனுடன் (21) அவருக்கு நட்பு ஏற்பட்டது. அழகேந்திரன் ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வந்தார். கோவிலாங்குளத்தில் வசிக்கும் பிரபாகரனின் தாய்மாமன் மகளை, அழகேந்திரன் காதலித்துள்ளார். இதனை பிரபாகரனும், அவரது தாய்மாமனும் கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர் காதலைத் தொடர்ந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அழகேந்திரனிடம் மது அருந்தலாம் என கள்ளிக்குடி அருகே காட்டுப்பகுதிக்கு பிரபாகரன் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அழகேந்திரனை அதிக அளவில் மது குடிக்க வைத்த பிரபாகரன், அவருக்கு போதை அதிகமானதும், பட்டாக்கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை வி.சத்திரப்பட்டியில் உள்ள சீமைக்கருவேல காட்டுக்குள் கொண்டு சென்றுள்ளார். அங்கு அழகேந்திரனின் கைகள், விரல்களை வெட்டியதுடன், நிர்வாணமாக்கி தலையைத் துண்டித்து அருகில் உள்ள நீர் வரத்து ஓடையின் அருகே வீசியுள்ளார். இதற்கிடையே அவருக்கும் மது போதை அதிகமானதால் அங்கேயே விழுந்து கிடந்துள்ளார். நேற்று காலை எழுந்ததும் வி.சத்திரப்பட்டி காவல் நிலையம் வந்து நடந்த சம்பவங்களை கூறி சரணடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அழகேந்திரனின் உடல், தலை மற்றும் பாகங்களைச் சேகரித்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரபாகரனை கைது செய்த போலீசார், அவரது தாய்மாமனுக்கும் தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் மதுரை அரசு மருத்துமவனைக்கு வந்த அழகேந்திரனின் தாய் மற்றும் குடும்பத்தினர், அழகேந்திரனின் உடலை பெற மறுத்து, மகன் காதலிக்கும் பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆணவ படுகொலை செய்து விட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மதுரை கலெக்டர் அலுவலகம் வந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். அழகேந்திரனின் தாயார் மாரியம்மாள் கூறும்போது, ‘‘எனது மகனை பிரபாகரன் தனியாக அழைத்துச் சென்ற நிலையில் காலையில் கொலை செய்து விட்டதாக தகவல் வந்தது. மகன் எப்படி இறந்தார் என்பது கூட தெரியவில்லை’’ என்றார்.

10க்கும் மேற்பட்ட வழக்குகள் குண்டாசில் கைதானவர்
மதுரை எஸ்.பி அரவிந்தன் சம்பவ இடங்களை ஆய்வு செய்தார். கைதான பிரபாகரன் மீது ஏற்கனவே மாற்றுத்திறனாளிசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையிலுள்ளது. பிரபல ரவுடியாக வலம் வந்த அவர், கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டாசில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காதலை கைவிடாததால் ஆத்திரம்: கழுத்தை வெட்டி டிரைவர் படுகொலை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai District ,V.Venkatasalapurathai ,D.Kallupatti ,
× RELATED அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால்...