×

சென்னை-இலங்கை இடையேயான 4 விமான சேவைகள் திடீர் ரத்து: பயணிகள் கடும் அவதி

சென்னை: சென்னையில் இருந்து இலங்கை மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 4 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து தினமும் அதிகாலை 2 மணிக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு, அதிகாலை 3 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும். அந்த விமானம் மீண்டும் அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுச் செல்லும். அதேபோல்‌ மாலை 3 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னை வரும் அந்த விமானம், மீண்டும் மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுச் செல்லும்.

அதன்படி தினமும் இயக்கப்படும் இலங்கை-சென்னை 2 வருகை விமானங்கள், சென்னை-இலங்கை 2 புறப்பாட்டு விமானங்கள் என மொத்தம் 4 விமானங்கள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்களில் இலங்கை செல்லும் பயணிகள் மட்டுமின்றி, இலங்கை வழியாக மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் டிரான்சிட் பயணிகளும் செல்வார்கள். திடீரென இந்த 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிர்வாக காரணங்களால், இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த விமானங்களில் பயணிக்க வேண்டிய பயணிகள் வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post சென்னை-இலங்கை இடையேயான 4 விமான சேவைகள் திடீர் ரத்து: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sri Lanka ,SriLankan Airlines ,Colombo ,
× RELATED இலங்கை அத்துமீறலுக்கு முடிவுகட்ட வேண்டும்: அன்புமணி