×

தேனியில் இருந்து சீருடை அணிந்து பஸ்சில் கொண்டு வந்தது அம்பலம் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா விற்ற போலீஸ்காரர் சஸ்பெண்ட்

*ஊட்டியில் உதவியாக செயல்பட்டவரும் கைது

ஊட்டி : ஊட்டியில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா விற்று கைதான போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக செயல்பட்டவரையும் போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாபிரியா, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மாள் தலைமையிலான போலீசார் ஊட்டி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 200 கிராம் கஞ்சா இருந்தது.

இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடந்தது. அப்போது அவர் திண்டுக்கல் மாவட்டம் வெல்வார்பேட்டை முத்தன்கோட்டை பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (29) என்பதும், இவர் கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரராக பணியில் சேர்ந்தவர் என்பதும், கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. 14வது பழனி பட்டாலியன் பிரிவில் உள்ள இவர் நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

அணை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிறப்பு காவல் படை போலீசாரின் நீலகிரி மாவட்ட தலைமை அலுவலகம் ஊட்டியில் உள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட இவர் தேனி மாவட்டத்தில் இருந்து கஞ்சா எடுத்து வந்து ஊட்டியில் கடந்த 4 மாதங்களாக விற்பனை செய்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிந்து சவுந்தர்ராஜனை கைது செய்தனர். அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கைதான சவுந்தர்ராஜனின் தாய் கீரை வியாபாரம் செய்கிறார். தந்தை இறந்துவிட்டார். இந்த குடும்ப சூழ்நிலையில் சவுந்தர்ராஜன் என்ஜினீயரிங் படித்து வேலைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து போலீஸ் தேர்வு எழுதி போலீஸ்காரராகி பணியில் சேர்ந்துள்ளார். எனினும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட அவர் கஞ்சா விற்பனையில் இறங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சவுந்தர்ராஜன், எப்போதும் சீருடையில் கஞ்சா கொண்டு வந்து விற்பனை செய்துள்ளார். போலீஸ் சீருடையில் வந்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகமும் ஏற்படவில்லை. இதனை பயன்படுத்தி அடிக்கடி ஊட்டிக்கு பஸ்சில் கஞ்சா கொண்டு வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் 5 கிலோ வரை கொண்டு வந்து ஊட்டியில் உள்ள வியாபாரிகளுக்கு பிரித்து கொடுத்துவிட்டு செல்வதையும் வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இவர் பணியில் சேர்ந்தது முதல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதால் பல லட்சம் சம்பாதித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அது குறித்து விசாரணை நடக்கிறது. கஞ்சா விற்பனையில் பலருக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சவுந்தர்ராஜூடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் யார்? ஊட்டியில் யார் யாருக்கு கஞ்சா விற்பனை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சவுந்தர்ராஜன் தேனியில் இருந்து கொண்டு வரும் கஞ்சாவை ஊட்டியில் விற்பனை செய்வதற்காக எச்பிஎப் பாரதிநகர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்வரன் (34) என்பவர் உதவியாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சவுந்தர்ராஜனுக்கு கிலோ கணக்கில் கஞ்சா விற்பனை செய்து வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே, இவ்வழக்கில் மேலும் பல முக்கிய நபர்கள் சிக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே 3 பேர் சஸ்பெண்ட்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த உடையார் செல்வம் (27), எருமாடு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த அமரன் (24), ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த விவேக் ஆகிய 3 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

துப்பு கொடுத்த வியாபாரிகள்

கடந்த சில தினங்களுக்கு முன் கஞ்சா விற்பனை செய்து வந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர்கள் மூலமாக போலீஸ்காரர் சவுந்தர்ராஜன் கஞ்சா விற்பனை செய்வது தொடர்பான தகவல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்துதான் போலீசார் அவரை கண்காணித்து ஊட்டியில் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

The post தேனியில் இருந்து சீருடை அணிந்து பஸ்சில் கொண்டு வந்தது அம்பலம் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா விற்ற போலீஸ்காரர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Honey ,Neelgiri District ,Ooty ,West Police Inspector ,Meenapiriya ,Tani ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் 7 ஆயிரம் பேர்...