×

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேல்மட்ட சாலை திட்டத்தை வலியுறுத்துவோம்: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சட்டப்பேரவையில் நேற்று காலை நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் விவாதத்தில் பாமக எம்எல்ஏ சிவக்குமார் (மயிலம்) பேசுகையில், “இந்த நிதியாண்டில் நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.20,423 கோடிதான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானது அல்ல. தமிழகத்தில் இப்போது 65 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில், 17 சுங்கச்சாவடிகள் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நிறுவப்பட்டுள்ளது. தமிழக அரசு சுங்கச்சாவடிகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளையும் 4 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும். எனது தொகுதியான மயிலத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். மயிலம் தொகுதியில் நகராட்சி, பேரூராட்சிகள் இல்லை. மயிலத்தில் அரசு கலை கல்லூரி அமைத்துதர வேண்டும். தொகுதியின் மையப்பகுதியில் தீயணைப்பு நிலையமும், காவல் நிலையமும் அமைத்துதர வேண்டும்”என்றார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை குறைக்க கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதேபோல், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 27 கி.மீ. தூரத்துக்கு மேல்மட்ட சாலை அமைக்க நாம் திட்டமிட்டோம். ஆனால், ஒன்றிய அரசு 6 வழி பசுமைச் சாலையாக அமைக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்கிறது. இருந்தாலும், மேல்மட்ட சாலை அமைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றார்.

The post தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேல்மட்ட சாலை திட்டத்தை வலியுறுத்துவோம்: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Minister ,AV Velu ,BAMA ,MLA ,Sivakumar ,Peacock ,Legislative Assembly ,Tamil Nadu ,-Chengalpattu ,Dinakaran ,
× RELATED வெல்டிங் தீப்பொறி விழுந்து விபரீதம்:...