×

தாட்கோ திட்டத்தின் கீழ் மானியத்துடன் ரூ23 லட்சம் மதிப்பில் வாகனங்கள்: பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: தாட்கோ திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய ரூ23 லட்சம் மதிப்பிலான வாகனங்களை பயனாளிகளுக்கு கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள்குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் த.பிரபுசங்கர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொதுபிரச்னைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 570 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 148 மனுக்களும், சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 93 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 115 மனுக்களும், பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 91 மனுக்களும், இதரதுறைகள் சார்பாக 123 மனுக்களும் என மொத்தம் 570 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தேசிய அறக்கட்டளை மூலமாக 26 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாவலர் சான்றிதழை வழங்கினார். மேலும் மக்களுடன் முதல்வர் முகாமில் விண்ணப்பித்திருந்த 3 பயனாளிகளுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் விடுவிக்கப்பட்டு, பயனாளிகளின் 5 சதவீத பங்களிப்புடன் ரூ10,67,584 மதிப்பில் கனரக வாகனமும், ரூ2,98511 மதிப்பீட்டிலான பயணியர் ஆட்டோவும், ரூ9,41,776 மதிப்பில் கார் என மொத்த ரூ23,07,871 மதிப்பிலான வாகனங்களை கலெக்டர் பயனாளிகளிடம் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளுர்), தீபா (திருத்தணி), தனித் துணை ஆட்சியர் கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், தாட்கோ மேலாளர் இந்திரா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post தாட்கோ திட்டத்தின் கீழ் மானியத்துடன் ரூ23 லட்சம் மதிப்பில் வாகனங்கள்: பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Collector ,T.Prabhushankar ,T. Prabhu Shankar ,Thiruvallur District Collector ,
× RELATED உங்களைத் தேடி உங்கள் ஊரில்...