×

மதுராந்தகம் வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த காஞ்சி எம்பி

மதுராந்தகம்: மதுராந்தகம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பொதுமக்களுக்கு காஞ்சிபுரம் எம்பி செல்வம் நன்றி தெரிவித்தார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட க.செல்வம் 2.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் காஞ்சிபுரம் எம்பி செல்வம் நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி, மதுராந்தகம் வடக்கு, தெற்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட 58 ஊராட்சிகளில் காஞ்சிபுரம் எம்பி செல்வம் திறந்த ஜீப்பில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதில், மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள வையாவூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் சத்யசாய் தலைமையில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அறங்காவலர் தினேஷ், முன்னாள் அறங்காவலர் ஏழுமலை ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் உணவுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் எம்பி செல்வம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கி பேசுவையில், ‘2.21 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வையாவூர் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன், என்றார். முன்னதாக மெய்யூர், மாமண்டூர், பழமத்தூர், பழையனூர், கள்ளபிராம்புரம், வேடவாக்கம், ஜானகிபுரம், உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிணார், கே.கே.புதூர், முதுகரை, நேத்தப்பாக்கம், சரவம்பாக்கம், ஓணம்பாக்கம், அருங்குணம், தேவதூர், விளங்கனூர், சாலையூர், சிலாவட்டம், பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பொது மக்களையும் திமுக நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு எம்பி செல்வம் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் துர்கேஷ், ஆறுமுகம், தனசேகரன், சுந்தரவரதன், தமிழரசன், தேவராஜ், கண்ணன், மணியன், ஸ்ரீதர் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக முன்னோடிகள், இந்தியா கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மதுராந்தகம் வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த காஞ்சி எம்பி appeared first on Dinakaran.

Tags : Kanchi ,Madurathangam ,North ,South ,Unions ,Madhuranthakam ,Kanchipuram ,Selvam ,Maduranthakam north ,south union ,K. Selvam ,DMK ,Madurathangam North and South Unions ,
× RELATED காஞ்சியில் நடந்த சிறப்பு முகாமில்...