×

இன்னும் 18 மாதங்களில் 75,000 பேருக்கு அரசு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: இளைஞர் நலனை, இளைஞர் எதிர்காலத்தை, இளைஞர்களின் மேன்மையை எப்போதும் மனதில் வைத்து திட்டங்களைத் தீட்டி வருவது திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை.

இளைய சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிக மிகக் கவனமாகச் செயல்பட்டு வருகிறோம். வளமான அரசாக, அமைதியான அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் வளம் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அதன்மூலம் நமது இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றிடவும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறோம். நமது மாணவச் செல்வங்களுக்குத் தரமான பள்ளிக் கல்வியையும் உயர்கல்வியையும் அளிக்கிறோம்.

அத்துடன் அவர்களது வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கல்வியின் மூலமாக ஒரு அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறோம். இவற்றை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவைதான் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள். அடுத்த தேர்தலை அல்ல, அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் அரசுதான் திராவிட மாடல் அரசு.

திமுக அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 நபர்களுக்குப் பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர்.

மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, பெருந்தொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களின் மூலமாகவும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம். திமுக அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளின் காரணமாகவும், மிகச்சிறப்பான முறையிலே நடத்தி முடிக்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைக்கப் பெற்ற பெரும் முதலீடுகள் காரணமாகவும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதனை ஆதாரத்தோடு தெரிவிக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் ஒன்றிய அரசின் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்டது. இது ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓர் அமைப்பாகும். இந்த நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, என்னுடைய கனவுத் திட்டமான “நான் முதல்வன் திட்டம்” மூலம் சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டு, படித்த இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 3 லட்சத்து 6 ஆயிரத்து 459 நபர்களுக்குத் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சத்து 1596 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.

இந்த இரண்டையும் சேர்த்து, தமிழ்நாடு அரசின் முயற்சியினால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், மொத்தம் 5 இலட்சத்து 8 ஆயிரத்து 55 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘நம் இளைஞர்கள்தான் நம் பலம். அவர்கள்தான் நமது எதிர்கால வளத்திற்கு அடிப்படையானவர்கள்’ என்பதை உணர்ந்த காரணத்தால், தமிழ்நாடு அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அரசுப் பணியினை எதிர்நோக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்கிறேன்.

வரும் ஜனவரி 2026க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும்.

அதாவது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும். இதுதவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக் கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும். இவற்றை மொத்தமாக சேர்த்தால் 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். முதல்வரின் 110 அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து வேல்முருகன் (தவாகா), ஈஸ்வரன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக), சதன் திருமலைக்குமார்(மதிமுக), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), நாகைமாலி(சிபிஎம்), ஜெ.முகமது ஷாநவாஸ் (விசிக), வானதி சீனிவாசன் (பாஜக), வெங்கடேஸ்வரன்(பாமக), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்) ஆகியோர் பேசினர்.

* அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 17 ஆயிரத்து 595 பணியிடம்.

* ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடம்.

* மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 3 ஆயிரத்து 41 பணியிடம்.

* தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 6 ஆயிரத்து 688 பணியிடம் நிரப்பப்படுகிறது.

* 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும்.

* மொத்தம் 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

* இதுதவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக் கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும்.

The post இன்னும் 18 மாதங்களில் 75,000 பேருக்கு அரசு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : PM K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,K. Stalin ,Tamil Nadu Assembly Council ,K. ,Stalin ,Chief Mu K. Stalin ,
× RELATED ஆணவக்கொலை வழக்கு: பெண் கல்வி,...