×

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதம்:
நான், எனது முந்தைய கடிதத்தில் சுட்டிக் காட்டியது போன்று மீனவர்களை கைது செய்தல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்வதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சமுதாயத்தினரிடையே மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 22.06.2024 அன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 22 மீனவர்கள், INDTN-10-MM-84, IND-TN-10-MM-88 மற்றும் IND-TN-10-MM-340 ஆகிய பதிவு எண்களை கொண்ட மூன்று இயந்திர படகுகளுடன் மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று எனது கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தேன்.
அதேபோன்று, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும், அடிப்படை தேவைகளையும் வழங்கிட அனுமதி தர வேண்டுமென தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.
மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்த பிரச்னைக்கு தீர்வுகாண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண இலங்கை அதிகாரி
களிடம் எடுத்துரைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

The post இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan government ,Chief Minister ,Jaisankar K. Stalin ,Chennai ,Government of Sri Lanka ,Sri Lankan Navy ,K. Stalin ,Minister of Foreign Affairs of the Union ,Jaisankar ,EU ,Minister ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு...