×

குஜராத் மோடி ஆட்சியில் 200 பேர் விஷ சாராயத்துக்கு இறந்துள்ளனர்: செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னை: அமமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் காங்கிரசில் இணையும் விழா சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. இதில், என்.ஆர்.டி.தியாகராஜன் ஏற்பாட்டில், தேனி மாவட்ட அமமுகவை சேர்ந்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் வி.பி.ஏ.மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் கவுன்சிலர்கள் பாண்டிஸ்வரன், சுந்தரவள்ளி, சுகன்யா, சந்திரா, மலர்க்கொடி உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். பிறகு செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி நான்காண்டுகள் முதல்வராக இருந்தபோது 20க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

காந்தி பிறந்த குஜராத்திலேயே, மோடி ஆட்சியில் இருந்த போது 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கின்றனர். அப்போது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை பார்க்க வேண்டும். 2001ம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 52 பேர் விஷ சாராயம் அருந்தி இறந்து போனார்கள். அதே ஆண்டில் கொரட்டூர், ரெட் ஹில்ஸ் மற்றும் அம்பத்தூரில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு நடந்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், மாநில தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் ரங்கபாஷ்யம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், இலக்கிய அணி தலைவர் புத்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post குஜராத் மோடி ஆட்சியில் 200 பேர் விஷ சாராயத்துக்கு இறந்துள்ளனர்: செல்வப்பெருந்தகை காட்டம் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,CHENNAI ,Congress ,AAMUK ,Sathyamurthi Bhavan ,NRT ,Thiagarajan ,Palanisettipatti Municipal Council ,President ,VPA ,Mithun Chakraborty ,Theni ,District Amamuka ,Pandiswaran ,Sundaravalli ,Sukanya ,Chandra ,Malarkodi ,Selvaperundagai ,
× RELATED குஜராத் தொழிற்பேட்டைகளில் நிலம்...