×

நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி அறிவித்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு: மாணவரணி செயலாளர் எழிலரசன் அறிவிப்பு

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என மாணவரணி செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார். கடந்த மே 5ம் தேதி 4750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். அந்த தேர்வின் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. குறிப்பாக 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் பெற்றது, 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது என பல்வேறு புகார்கள் எழுந்தது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் வரும் 24ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நீட் தேர்வே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதற்காக நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்ட மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்றும் நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிக பெரிய மோசடிகளை, குளறுபடிகளை களைவதற்கு மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஒன்றிய பாசிச பாஜ அரசை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் வருகிற 24ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற இருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி அறிவித்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு: மாணவரணி செயலாளர் எழிலரசன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Student Secretary ,Ehilarasan ,Chennai ,Ehelarasan ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடு – ஜூன் 24-ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்