×

அதிமுக உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக வெளிநடப்பு: தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரிக்கை

சென்னை: தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தை எழுப்பி அதிமுகவினர் இன்றும் அமளியில் ஈடுபட்டனர்.

இரண்டாவது நாளாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளி

இரண்டாவது நாளாக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர். நேற்று பேரவை கூட்டத்தை புறக்கணித்த அதிமுகவினர் இன்று பங்கேற்றுள்ளனர். சபாநாயகர் வேண்டுகோளை மீறி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

கேள்வி நேரத்துக்குப் பின் நிச்சயம் அனுமதி தரப்படும் – சபாநாயகர்

கேள்வி நேரம் முடிந்த பிறகு, எந்த பிரச்னையை எழுப்பினாலும் அனுமதி தருகிறோம்” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சபாநாயகர் வேண்டுகோளை ஏற்காமல் அதிமுகவினர் தொடர்ந்து குரல் எழுப்புவதால் பேரவையில் அமளி ஏற்பட்டுள்ளது. கேள்வி நேரத்தை ஒத்திவைக்க முடியாது என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுக உறுப்பினர்களின் பேச்சுகள் எதுவும் அவைக் குறிப்பில் இடம்பெறாது என்றும் தெரிவித்தார்.

அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுறுத்தல்

அமைதியாக இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அப்பாவு மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். அதிமுக உறுப்பினர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை சட்டமன்றத்தில் வெளிப்படுத்தக் கூடாது. சட்டமன்ற அவை விதிகளுக்கு உட்பட்டே அவையை வழிநடத்த முடியும். அதிமுகவினர் அவையை புறக்கணிப்பதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

விஷச் சாராயம் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நேற்று பேரவை கூட்டத்தை புறக்கணித்த அதிமுகவினர் இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென அதிமுகவினர் கோரிக்கை வைத்தனர். கேள்வி நேரம் முடிந்த பிறகு எந்த பிரச்சனையை எழுப்பினாலும் அனுமதி தருவதாக சபாநாயகர் உறுதியளித்தும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அனுமதி அளிக்காத நிலையில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது.

The post அதிமுக உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக வெளிநடப்பு: தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,CHENNAI ,Speaker ,Appavu ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை..!!