×

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 8 முறை பிரசாரம் செய்தும் பிரதமர் பேச்சு தமிழகத்தில் எடுபடவில்லை: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

தண்டையார்பேட்டை: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை ராயபுரம் கிழக்கு பகுதி (49அ) வட்டம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் நேற்று நடந்தது. வட்ட செயலாளர் காட்டன் சதீஷ்குமார் தலைமை வகித்தார். ராயபுரம் பகுதி செயலாளர்கள் செந்தில்குமார், வ.பெ.சுரேஷ் முன்னிலை வைத்தனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, 800 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: கலைஞர் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். முதன்முதலில் பெண் காவலரை நியமித்தது கலைஞர்தான். அவர் மரணமடைந்தும் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கொடுக்க எடப்பாடி அரசு மறுத்தது. திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடத்தை பெற்றோம்.

நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி தமிழகத்துக்கு 8 முறை வந்து வாக்கு சேகரித்தார். இருப்பினும் அவரது பேச்சு எடுபடவில்லை. தமிழக மக்கள் பாஜவை நன்கு அறிந்துள்ளார்கள். இந்த தேர்தலில் 70 சதவீத பெண்கள் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். இது மேலும் உயரக்கூடும். கள்ளச்சாராய பலி சம்பவத்தில் அதிகாரிகள் செய்த தவறால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் கள்ளக்குறிச்சி கலெக்டர், எஸ்பி மற்றும் காவல் அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்து முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். யார் தவறு செய்தாலும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.
அண்ணாமலை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

விஷச்சாராய பலி சம்பவத்தில் முதல்வரை பதவி விலக சொல்வது எந்த விதத்தில் நியாயம். இதே பாஜ ஆட்சியில் எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளது. பதவி விலகினார்களா? உதாரணத்திற்கு பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. பிரதமர், ரயில்வே அமைச்சர் பதவி விலகினார்களா? அவர்களுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயமா? தமிழக முதல்வர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான ஆர்.டி.சேகர், ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ந.மனோகரன், மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

 

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 8 முறை பிரசாரம் செய்தும் பிரதமர் பேச்சு தமிழகத்தில் எடுபடவில்லை: ஆர்.எஸ்.பாரதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM ,Tamil Nadu ,RS ,Bharati ,Thandaiyarpet ,MC Road, Vannarappat ,Chennai Rayapuram East Area ,49A) Circle ,Circle ,Cotton Satish Kumar ,Rayapuram ,Dinakaran ,
× RELATED இந்திய அரசமைப்புச் சட்டம் மீது...