- தீவிர குற்றப்பிரிவு
- அண்ணாநகர்
- சென்னை வடக்கு மண்டல தீவிர குற்றப்பிரிவு
- பெரியபாளையம்
- திருவள்ளூர் மாவட்டம்
- தீவிர குற்றப்பிரிவு போலீசார்
- தின மலர்
அண்ணாநகர்: கொலை செய்ய திட்டமிட்டு, வீட்டில் 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டா கத்திகள் பதுக்கிய 2 ரவுடிகளை சென்னை வடக்கு மண்டல அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளைம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மர்ம நபர்கள் இருவர், பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாகவும், முக்கிய நபர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், வடக்கு மண்டல அத்தீவிர குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு பெரியபாளையம் பகுதியில் மாறுவேடத்தில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த இருவரை நிறுத்தி விசாரிக்க முயன்றனர். ஆனால், மர்ம நபர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். போலீசார் இருவரையும் மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது, இருவரிடமும் கத்திகள் இருந்தன. இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபல ரவுடி சுரேஷ் (39), பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சங்கர் (41) என தெரியவந்தது.
பின்னர், சுரேஷின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டா கத்திகள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் கைது செய்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பிரபல ரவுடிகளான சுரேஷ், சங்கர் ஆகியோர் மீது கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மேலும், நாட்டு வெடிகுண்டுகள், கத்திகளை எதற்காக பதுக்கி வைத்தனர். யாரைக் கொல்ல சதிதிட்டம் தீட்டினர், என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், அவர்களது செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்யும் நோக்கில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இருவரை வடக்கு மண்டல அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு, கத்திகள் பதுக்கிய 2 ரவுடிகள் கைது: அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.