×

பட்டுக்கோட்டை, மதுக்கூரில் நடந்த மக்களை தேடி முதல்வர் முகாமில் 3000 மனுக்கள்-அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பெற்றார்

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டையில் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தீர்வு காண உள்ளார் என்று அறிவிக்கப்பட்டதால் அமைச்சரிடம் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக வழங்குவதற்கு காலையிலிருந்தே மண்டபத்திற்கு பொதுமக்கள் வரத்தொடங்கினர். சுமார் 750க்கும் பெண்கள் உள்பட 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர்.அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மண்டபத்திற்குள் நுழையும்போது நுழைவு வாயிலிலிருந்தே பொதுமக்களிடம் அவர்களது இருக்கைக்கே தேடிச்சென்று மனுக்களை வாங்கினார். அதனை தொடர்ந்து நடந்த விழாவிற்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை பேசினார்.அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக தரும்போது அதை நாங்கள் வெறும் காகிதங்களாக பார்க்கவில்லை. நீங்கள் எங்கள்மீது வைத்திருக்கக் கூடிய நம்பிக்கையாகவே பார்க்கின்றோம். நாங்கள் தேர்தல் நேரத்தில் எப்படி வேர்க்க விறுவிறுக்க ஓட்டு கேட்க வந்தோமோ அந்த நிலையிலிருந்து கொஞ்சம்கூட மாறாமல் இன்று வேர்க்க விறுவிறுக்க உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றார். முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலசுப்ரமணியன், பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் பட்டுக்கோட்டை வடக்கு பார்த்திபன், மேற்கு ராமநாதன், கிழக்கு முருகானந்தம், தெற்கு சத்தியவிஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மதுக்கூர்: முன்னதாக மதுக்கூரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாமில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சுமார் 1,000க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றார். மதுக்கூர் ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் இளங்கோ, கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை, மதுக்கூரில் மொத்தம் 3,000 மனுக்களை பொதுமக்களிடமிருந்து அமைச்சர் பெற்றுள்ளார்.வேலை கேட்டு அமைச்சரிடம் பெண் கதறல்பேராவூரணியில் நடைபெற்ற விழாவில் எம்எல்ஏ அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாாணிக்கம் ஆகியோர் முன்னிலை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மனுக்களை பெற்றார். அப்போது மேடையேறிய இளம்பெண் ஒருவர் தான் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், கனவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இரு குடும்பத்தினரும் தன்னை கைவிட்டு விட்டதாகவும், கைக்குழந்தையுடன் தவித்து வருகிறேன்.பி.காம் 2ம் ஆண்டு படித்துள்ளேன். தன்னையும், குழந்தையும் காப்பாற்றிக் கொள்ள ஏதாவது வேலை தருமாறும் என்றும் சொல்லி, அவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காலில் விழுந்து கதறி அழுதார். இதையடுத்து அவரை சமாதானம் செய்த அமைச்சர், கலெக்டரிடம் அந்த பெண்ணின் விவரத்தை பெற்று, கோரிக்கையை நிறைவேற்றுமாறு கூறினார். இதையடுத்து அந்த பெண்ணிடம், அமைச்சர், கவலைப்படாமல் போம்மா எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஆறுதல் கூறினார்.மாணவர்கள் சீருடையுடன் மனுஅதிராம்பட்டினத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பிள்ளைமார் தெரு அருகிலுள்ள தோப்புக்காடு பகுதியில் 15 வீடுகளுக்கு மேல் உள்ளது. இங்கு 20 வருடங்களுக்கு மேலாக மின் வசதி இல்லாமல் இந்த பகுதியில் படிக்கும் மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் எனவே உடனடியாக எங்களுக்கு மின்வசதி செய்து தர வேண்டும் என இப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தது குறிப்பிடத்தக்கது….

The post பட்டுக்கோட்டை, மதுக்கூரில் நடந்த மக்களை தேடி முதல்வர் முகாமில் 3000 மனுக்கள்-அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பெற்றார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mahesh ,Chief Minister ,Pattukkota ,Madukkur ,Thaluka ,Palukkotta ,Padukkotta ,Makesh ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...