சென்னை: ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மூன்று பிரதமர்களை வழங்கியதோடு, உள்நாட்டு அரசியலின் மையமாகவும் உள்ள நேரு குடும்பத்தில் கடந்த 1970ம் ஆண்டு ஜுன் 19ம் தேதி ராகுல் காந்தி பிறந்தார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனாகவும், நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பேரனாகவும் அடையாளம் காணப்படுகிறார். ஆனால், இன்று தனக்கான ஒரு அடையாளத்தை தானே உருவாக்கி வரும் முயற்சியில் பெரும் வெற்றிகளையும் குவித்து வருகிறார்.
இந்த சூழலில் தான் இந்தியாவின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி, இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து பிறந்தநாள் விழாக்களை உற்சாகமாக நடத்தி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணம் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தலைவர்கள் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்; ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ராகுல் காந்தி மிக உயர்ந்த இடத்துக்கு செல்வார். இந்த ஆண்டு முழுவதும் ராகுலுக்கு வளர்ச்சி மற்றும் வெற்றிகள் வந்துசேரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ராகுலுக்கு வளர்ச்சி மற்றும் வெற்றிகள் வந்துசேரட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.