×

3வது முறையாக பதவியேற்ற பிறகு இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்ற மோடி, முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று இத்தாலிக்கு புறப்பட்டு சென்றார். ஜி 7 அமைப்பின் 50வது உச்சி மாநாடு இத்தாலியின் அபுலியா மாகாணத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காகவே பிரதமர் மோடி புறப்பட்டு சென்று உள்ளார். 50வது உச்சி மாநாடு இத்தாலியின் பசானோ நகரில் 15ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரோன், ஜப்பான் பிரதமர் பூமியோ ஹிசாடியா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதில் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் அவர் புறப்பட்டு சென்றார்.

இந்த மாநாடு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,’இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் ஜி 7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலியில் உள்ள அபுலியா பகுதிக்கு பயணம் மேற்கொள்கிறேன். தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் முதல் பயணமாக, இத்தாலிக்கு செல்வது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா-இத்தாலி இடையேயான உறவை வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

The post 3வது முறையாக பதவியேற்ற பிறகு இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Italy ,G7 Summit ,New Delhi ,Modi ,Lok Sabha elections ,G7 ,Apulia, Italy ,Dinakaran ,
× RELATED “ஏ.ஐ. தொழில்நுட்பம் அழிவுக்கு காரணமாகி...