×

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து 22ம் தேதி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சென்னை: நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஜூன் 22ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:நீட் தேர்வு தொடங்கிய காலம்தொட்டு நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடைபெறுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு குளறுபடிகள் உச்சத்திற்கு சென்றுள்ளது. நாடு முழுவதும் மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். உச்சநீதிமன்றமும் நீட் தேர்வின் ‘புனிதம்’ கெட்டுவிட்டதாக சாடியிருக்கிறது. இந்த நிலையில் மாணவர்களின் தன்னம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமான மருத்துவ துறையில் இத்தகைய குளறுபடிகள் தொடர்வது மருத்துவத் துறையையும், மக்கள் நல்வாழ்வையும் சீரழிக்கும்.எனவே, இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு மாநில அரசே நடத்திக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்திடவேண்டும். நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தரமாக விலக்களித்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஜூன் 22ம் தேதியன்று நடைபெற உள்ளது. பொது மக்களும், ஜனநாயக எண்ணம் கொண்டவர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து 22ம் தேதி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Marxist ,Nead election ,Chennai ,Marxist Communist Party ,NEET ,Secretary of State ,Balakrishnan ,22nd ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்...