×

சென்னை – ஹவுரா சூப்பர் பாஸ்ட் மெயில் சம்பவம் பரிதாபமான நிலையில் ரயில் சேவை: தயாநிதி மாறன் எம்.பி கண்டனம்

சென்னை: பரிதாபகரமான நிலையில் ரயில் சேவை இருப்பதாக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் டிவிட்டர் பதிவில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை-ஹவுரா சூப்பர் பாஸ்ட் மெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாதவர்கள் கும்பலாக ஏறியதால் முன்பதிவு செய்தவர்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

இது சமீபகாலங்களில் நடைபெற்ற முதல் சம்பவம் அல்ல. முன்பும் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. இச்சம்பவம் நமது ரயில் சேவை பரிதாபகரமான நிலையில் இருப்பதையே காட்டுகிறது. இது முன்பதிவு செய்த பயணிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதோடு மட்டுமல்லாமல் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்திலேயே இதற்கான தீர்வை அதிகாரிகள் செய்யாதது ஏன் என்பது குறித்து ரயில்வே துறை விசாரணை நடத்த வேண்டும்.

சென்னை- ஹவுரா மார்க்கத்தில் கூடுதல் ரயில்களை இயக்கி புலம் பெயர் தொழிலாளர்களின் அவல நிலையை போக்க வேண்டும். ரயில்வே அமைச்சகம், ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கு விரிவான திட்டங்களை வகுக்க வேண்டும். மேலும் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் தடங்களிலும் எவ்வளவு பயணிகள் பயணம் செய்கிறார்கள். அதற்கு ஏற்றவாறு எத்தனை புதிய ரயில்கள் தேவை என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சென்னை – ஹவுரா சூப்பர் பாஸ்ட் மெயில் சம்பவம் பரிதாபமான நிலையில் ரயில் சேவை: தயாநிதி மாறன் எம்.பி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Howrah ,Dayaniti Maran ,Central ,Twitter ,Madhya ,Dayanitimaran ,Haura ,
× RELATED சென்னை – ஹவுரா ரயிலில் முன்பதிவு...