×

மேலப்பாளையம் கால்நடை சந்தையில் பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகள் குவிந்தன

நெல்லை : தென் மாவட்டங்களில் எட்டயபுரம் சந்தைக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை ஆடுகள் விற்பனை நடந்து வருகிறது. இச்சந்தைக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் கேரள வியாபாரிகளும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வரும் 17ம் கொண்டாடப்படுகிறது.

ஹஜ் பெருநாள் என அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையில் இறைவனின் தூதரான நபிகளின் தியாகத்தை இஸ்லாமியர்கள் நினைவு கூர்வர். அந்த நாளில் ஏழைகளும் இறைச்சி சாப்பிட்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கருதி, இஸ்லாமியர்கள் இறைச்சியை தானம் செய்வது வழக்கம். பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆடு, மாடுகளை பலி கொடுத்து, 3 பகுதிகளாக பிரிப்பர். ஒன்றை தம் குடும்பத்திற்கும், 2ம் பகுதியை உறவினர்களுக்கும், 3ம் பகுதியை ஏழைகளுக்கும் தானம் கொடுப்பர். இது இஸ்லாமியர்களின் வழக்கப்படி குர்பானி எனப்படுகிறது.பக்ரீத் பண்டிகைக்காக குர்பானி கொடுப்பதற்கு ஆடுகள் வாங்க நேற்று மேலப்பாளையம் சந்தையில் ஏராளமானோர் குவிந்தனர்.

சந்தையில் வெள்ளாடு, செம்மறி ஆடு, வேலி ஆடு, பொட்டு ஆடு உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகள் விற்பனைக்கு வந்தன. நாட்டு ரக ஆட்டுக்குட்டிகள் ரூ.2 ஆயிரம் தொடங்கி ரூ.30 ஆயிரம் வரையிலான மதிப்பில் சந்தையில் விற்கப்பட்டன. வியாபாரிகளிடம் செம்மறி ஆடுகளை பொதுமக்கள் போட்டி போட்டு விலை பேசி வாங்கிச் சென்றனர். சந்தைக்கு வெளிப்பகுதியில் உள்ள டக்கரம்மாள்புரம் ரோட்டில் இருபுறமும் கோழிகள், கருவாடு விற்பனையும் களைகட்டியது.

சந்தை வியாபாரம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘மேலப்பாளையம் சந்தையில் எப்போதுமே உச்சபட்ச வியாபாரம் ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகையை ஒட்டி நடப்பது வழக்கம். அதிலும் பக்ரீத் பண்டிகையை ஒட்டி இறைச்சியை தானம் செய்யும் பழக்கம் உள்ளதால், ஆடுகளை தேவைக்கேற்ப வாங்கிச் செல்வர்.நேற்று ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.’’ என்றனர்.

கடையத்தில் ரூ.1 கோடிக்கு விற்பனை: கடையம் மெயின் ரோட்டில் வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று சந்தை செயல்படுகிறது. இந்த சந்தையில் உள்ளூர் மட்டுமின்றி தென்காசி, நெல்லை, மேலப்பாளையம், கடையநல்லூர், புளியங்குடி, ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கியும் விற்றும் செல்கின்றனர். வருகிற 17-ம் தேதி பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று முன்தினம் கூடிய ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனைக்காக குவிந்தன. ஆடுகள் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.60 ஆயிரம் வரை விலை போனது.
ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்கப்பட்டதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு ஆடு விலை ரூ.80 ஆயிரம்

மேலப்பாளையம் சந்தையில் நேற்று காலையில் எடைக்கு ஏற்ப ஆடுகளுக்கு வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்தனர். ஆடுகள் ரூ.8 ஆயிரம் தொடங்கி, ரூ.25 ஆயிரம் விலை போயின. அதிகபட்சமாக ஒரு ஆடு ரூ.80 ஆயிரத்திற்கு விற்பனையானது. மதுரையைச் சேர்ந்த கிரி என்பவரின் ஆடுகள் ரூ.60 ஆயிரம் மற்றும் ரூ.70 ஆயிரத்திற்கு விலை போனது. மூன்றரை அடி உயரம் கொண்ட கோங்கு வகை ஆடுகளை அவர் நல்ல விலைக்கு விற்பனை செய்தார்.

The post மேலப்பாளையம் கால்நடை சந்தையில் பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகள் குவிந்தன appeared first on Dinakaran.

Tags : Bakhrit festival ,Appalayam Livestock Market ,Nella ,Etayapuram market ,Thoothukudi ,Tenkasi ,Madurai ,Theni ,Dindigul ,Appalayam Cattle Market ,
× RELATED பக்ரீத் பண்டிகையையொட்டி ₹15 கோடிக்கு ஆடுகள் விற்பனை