×

கள்ளக்கடல் எச்சரிக்கை எதிரொலி குளச்சலில் பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

குளச்சல் : குமரி மாவட்டத்தில் கள்ளக்கடல் எச்சரிக்கையால் நேற்று குளச்சலில் இருந்து பைபர் வள்ளங்களில் மீன்வர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. குமரி மாவட்டம் குளச்சலில் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.

ஆழ்கடல் பகுதியில்தான் உயர் ரக மீன்களாகிய இறால், புல்லன், கணவாய், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். கட்டுமரம் மற்றும் பைபர் வள்ளங்கள் அருகில் சென்று மீன் பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும். இதில் சாளை, நெத்திலி, விளமீன்கள் பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே தென்னிந்திய பகுதியில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும்(12ம் தேதி) மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. இதையடுத்து மீனவர்கள் மீன் பிடி உபகரணங்களுடன் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி உள்ளனர்.

நேற்று ஒரு சில வள்ளங்களே கடலுக்கு சென்றன. அவற்றில் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே நேற்று குமரிக்கடல் கள்ளக்கடலாக மாறி சீற்றமாக காணப்படும் எனவும், இதனால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்திருந்தது.

இதையடுத்து குளச்சல் சுற்று வட்டார மீனவர் கிராமங்களை சேர்ந்த கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கடந்த 2 வாரமாக மழை, காற்று காரணமாகவும் நேற்று கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாகவும் பைபர் வள்ளங்கள் கடலுக்கு செல்லாததால் குளச்சலில் மீன் வரத்து குறைந்து உள்ளது. மீன் வாங்க வந்த வியாபாரிகள், மீன் பிரியர்கள் மீன்கள் கிடைக்காமல் திரும்பி சென்றனர்.கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி, குமரி கடற்கரை கிராமங்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.

The post கள்ளக்கடல் எச்சரிக்கை எதிரொலி குளச்சலில் பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Kumari district ,Kulachal, Kumari district ,
× RELATED குடிபோதையில் வாகனம் ஓட்டிய 33 பேருக்கு ₹10 ஆயிரம் அபராதம்