×

எழுத்தாளர் பாமாவிற்கு 2024ம் ஆண்டிற்கான ஒளவையார் விருதினை வழங்கி கௌரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: இலக்கிய துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் ஃபாஸ்டினா சூசைராஜுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒளவையார் விருது வழங்கினார். கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல். தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிருவாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாக தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசால் “ஔவையார் விருது” வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அவ்வகையில், தமிழ்நாடு அரசின் 2024-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதிற்கு இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும். முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை தனது வாழ்வனுபவங்களின் மூலம், சாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டும் பல்வேறு நூல்களை ஃபாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா எழுதியுள்ளார்.

இவற்றில் கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், குசும்புக்காரன். கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதை தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. இவர் எழுதிய “கருக்கு” என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000-ஆம் ஆண்டின் ‘கிராஸ் வேர்ட்புக்’ விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் எழுதிய “கருக்கு” என்ற புதினம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும், “வன்மம்” என்ற புதினம் ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும், “சங்கதி” என்ற புதினம் பிரஞ்சு, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும், “குசும்புக்காரன்”, “ஒரு தாத்தாவும் எருமையும்” போன்ற சிறுகதை தொகுப்புகளிலிருந்து சில கதைகள் ஆங்கிலம், ஹிந்தி, உருது, கன்னடம், குஜராத்தி ஆகிய மொழிகளிலும், மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா அவர்களின் இலக்கியப் பணியினை பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் 2024-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நல ஆணையர் வே. அமுதவல்லி. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post எழுத்தாளர் பாமாவிற்கு 2024ம் ஆண்டிற்கான ஒளவையார் விருதினை வழங்கி கௌரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Bama ,K. Stalin ,CHENNAI ,FASTINA SUSAIRAJ ,Literature ,Science ,K. ,
× RELATED சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை...